Previous Lesson -- Next Lesson
5. யூதர்களின் ஆலோசனைச் சங்கம் (அப்போஸ்தலர் 22:30 - 23:10)
அப்போஸ்தலர் 22:30-23:5
22:30 பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான். 23:1 பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.2 அப்பொழுது பிரதானஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.3 அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.4 சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள்.5 அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
ஆண்டவர் மற்றும் பேதுரு, யோவான், அனைத்து அப்போஸ்தலர்கள், ஸ்தேவான் செய்த காரியங்களை யூதர்களின் ஆலோசனைச் சங்கம் (சனகெரிப்) முன்பு சாட்சியாக சத்தியத்தை சாட்சிபகரும்படி இயேசு பவுலை வழிநடத்தினார். இந்த முறை சனகெரிப் சங்கம் முன்பு கிறிஸ்தவ விசுவாசத்தை பவுல் அறிக்கையிட்ட போது பிரதான ஆசாரியனாக அனனியா இருந்து வழிநடத்தினான். பவுல் இந்த வஞ்சனையுள்ள தலைவனை அறியாதிருந்தான். அந்நேரம் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த காய்பா, அன்னா, யூத மூப்பர்கள் மற்றும் கமாலியேல் ஆகியோர் மரித்திருந்தார்கள். சில ஆண்டுகள் முன்பு தங்களுடன் பவுல் ஒத்துழைத்து நடந்ததை அறிந்தவர்களாக ஆலோசனைச் சங்கத்தில் சிலர் இருந்தார்கள். அவர்கள் தான் தமஸ்குவில் கிறிஸ்தவர்களை துன்புறுத்தும்படி பவுலுக்கு அதிகாரம் கொடுத்து அனுப்பியிருந்தாரகள்.
யூத ஆலோசனைச் சங்கத்தின் புதிய தலைமுறை பவுலின் பெயரை அறிந்து வைத்திருந்தாலும், அதை வெறுத்தார்கள். ரோம சேனாதிபதியின் கட்டளைக்கு அடிபணிவதற்கு விருப்பமற்று காணப்பட்டார்கள். முழு உலகத்திலும் யூதமதத்தை அழித்தொழிப்பவன் மீது தாக்குதலைத் தொடுக்க ஆலோசனைச் சங்கம் விரைந்தது. வாய்ப்பிருந்தால் பவுலைக் கொல்லவும் அவர்கள் முற்பட்டார்கள். அவர்கள் தங்கள் முழு உடையுடனும் அங்கு வரவில்லை. அவர்களால் ரோமர்களின் கட்டளையை மீறமுடியவில்லை. பிரதான ஆசாரியன் தனக்குரிய உடையை அணிந்திருக்கவில்லை. எனவே மற்ற மக்களிடம் இருந்து பிரதான ஆசாரியனை வேறுபடுத்தி பவுலால் காண முடியவில்லை.
தேசத்தின் மிக உயர்ந்த ஆலோசனைச் சங்கத்தின் முன்பு புறஜாதிகளின் அப்போஸ்தலன் குற்றவாளியைப் போல நிற்கவில்லை. அவன் இறைவனுடைய சித்தத்தின்படி கிறிஸ்துவின் ஸ்தானாபதியாக தைரியத்துடன் நின்றான். அவன் கிறிஸ்து தனக்கு வெளிப்படுத்தியதை பயன்படுத்தி பேசினான். நியாயப்பிரமாணத்தை பயன்படுத்தவில்லை. சத்தியத்திற்கு அஸ்திபாரமாக அவனது பேச்சு காணப்பட்டது. கிறிஸ்து தனது இரத்தத்தின் மூலமாக அவனுடைய இருதயத்தை தூய்மைப்படுத்தியிருந்தார். அவனது மனமாற்றத்திற்கு முன்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டதினால் ஏற்பட்ட மனவேதனையில் பரிசுத்த ஆவியானவர் அவனை ஆறுதல் படுத்தினார்.
நியாயப்பிரமாணத்தின் படி நல்மனச் சாட்சியுடன் இறைவனுக்கு சேவை செய்வதாக, அப்போது பவுல் எண்ணியிருந்தான். கிறிஸ்தவர்களைக் கொலை செய்வதற்காக அவன் வருத்தப்படவில்லை. ஆனால் உயிருள்ள ஆண்டவரை சந்தித்த பின்பு அவனது வாழ்வு தலைகீழாக மாறியது. அநேகருடைய மனமாற்றத்திற்கு அவன் பயன்படுத்தப்பட்டான். அவர்கள் நற்செய்தியினால் நித்தயஜீவனை பெற்றுக் கொண்டார்கள். இன்றும் பவுலின் சாட்சியின் மூலமாக நாம் ஆறுதல் பெறுகிறோம். அவனது வாழ்வின் இரகசியம், ஆரம்பத்தில் இருந்து அவன், தனக்காக வாழவில்லை, இறைவனுக்காக மட்டுமே வாழ்ந்தான் என்பதாகும். இது அவனுடைய உண்மையான கனத்திற்குரிய செயல் ஆகும். அவன் தனது சொந்தப் பெயரை உயர்த்தவில்லை. அவன் எல்லா நேரங்களிலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்தினான். நித்தியமானவருடன் இணைந்து வாழ்ந்தான்.
பவுல் ஆலோசனைச் சங்கம் முன்பு வைத்த தனது வாதத்தில் குறிப்பிட்ட மிக முக்கியமான காரியம், அவன் தனது நிலையில் சரியாக இருக்கிறான் என்பதும், பிரதான ஆசாரியன் மற்றும் மக்களின் பிரதிநிதிகளாக உயர்நிலையில் உள்ளோர் தங்களை இயேசுவிற்கு, ஒப்புக்கொடுக்காததால் தவறாக இருக்கிறார்கள் என்பதும் ஆகும். பவுல் அவர்களிடம் இறைவனுடைய வல்லமையோடு பேசினான். அவனது ஆண்டவருக்காக உறுதியாக நின்றான். யூதத் தலைவர்களுடன் பரிசுத்த ஆவியானவர் நேரடியாக பேசினார். மனந்திரும்பும்படி அவர்களது இருதயத்திற்கு தமது வார்த்தைகளை கொண்டுவந்தார்.
உடனடியாக வஞ்சனைமிக்க அனனியா பவுலை வாயில் அடிக்கும்படி தனது வேலைக்காரர்களுக்கு கட்டளையிட்டான். பவுல் பேசியதின் நிமித்தமாக இப்படிக் கட்டளையிட்டான். எல்லா மனிதர்களும் குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள். எவரும் நீதிமான் கிடையாது. இருப்பினும் ரோம அதிகாரிகள் முன்பும், மக்களின் முன்பும் பவுலை அவமானப்படுத்தும்படி இப்படிக் கட்டளையிட்டான்.
பவுல் தனது சொந்தக் காரணங்களுக்காக இங்கு நிற்கவில்லை. அவன் கிறிஸ்துவிற்காக நின்றான் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலினால் மாய்மால பிரதான ஆசாரியன் மீது வரும் இறைவனின் சாபத்தை பவுல் முன்னறிவித்தான். ஆலோசனைச் சங்கத்தின் பொய்யான மத வைராக்கியத்தோடு பிரதான ஆசாரியன் பேசினான்.பவுல் நியாயப்பிரமாணத்தின் காரியங்களை அறிந்திருந்தான். வெள்ளையடிக்கப்பட்ட சுவர் என்று கூறி பிரதான ஆசாரியனுக்கு பவுல் தனது சொந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பதிலளித்தான். அவன் வெள்ளையடிக்கப்பட்டவனாக அந்த உயர்ந்த பதவியில் இருந்தான். தன்னை அடிக்கச் சொன்னது பிரதான ஆசாரியனாகிய அனனியா என்பதை அறிந்தபின்பு பவுல் வருத்தம் தெரிவித்தான். இருப்பினும் அவனைக் குறித்து பவுல் முன்னறிவித்தது விரைவில் நிறைவேறி அனனியா கோரமாக செத்தான். ரோமர்களுடன் உறவு கொண்டாடிய காரணத்திற்காக செலோத்தை பிரிவினர் அவனை படுகொலை செய்தார்கள்.
அப்போஸ்தலர் 23:6-10
6 பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.7 அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.8 என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.9 ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.10 மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாதிபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
தனது நற்செய்தியை ஆராய்ந்து பார்க்க, அங்கு கூடியிருந்த யூதத் தலைவர்கள் ஆயத்தமாக இல்லை என்பதை அப்போஸ்தலன் உணர்ந்து கொண்டான். அவர்கள் அவனை குற்றம் சாட்டினார்கள். சதுசேயர்கள் கிறிஸ்தவர்கள் மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள். ஏனெனில் இந்த புதிய விசுவாசம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மீது கட்டப்பட்டிருந்தது. தத்துவவாதிகள் இப்படிப்பட்ட அனைத்து காட்சித் தோற்றங்கள், தரிசனங்கள், தூதர்கள், சொப்பனங்கள் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் அனைத்தையும் பொய் என்று கூறினார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையற்ற மக்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த அறிவு மற்றும் கொள்கைகளினால் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பவுல் தனக்கும் அவர்களுக்கும் இடையில் பொதுவான எதையும் காணவில்லை. அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்களை விட மோசமானவர்களாக இருந்தார்கள். பரிசேயர்களை பொறுத்தமட்டில் அவர்கள் அனைத்தையும் விசுவாசித்தார்கள். நியாயப்பிரமாணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். தூதர்கள் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதலை நம்பினார்கள். ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பு பவுல் தனக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கக் கூடிய பொதுவான காரியத்தை கண்டுபிடிக்க முயற்சித்தான். அவர்களுடைய நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அவர்களிடம் பேச விரும்பினான். பவுல் தான் ஒரு பரிசேயன் என்றும், பரிசேயக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும் சாட்சியிட்டான். அவன் தன்னுடைய எதிரிகளை சகோதரர்கள் என்று அழைத்தான். மேசியாவைக் குறித்த அவர்களது எதிர்பார்ப்பு மற்றும் அவரது வருகையில் நிகழும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பவுல் அவர்களிடம் ஒத்த நம்பிக்கையைக் கண்டான். இந்த அடிப்படை உண்மை தான் தனது விசுவாசத்திற்கு அஸ்திபாரம் என்றும், அதுவே முழு பிரபஞ்சத்தின் இலக்கு என்றும் வலியுறுத்தினான். அவன் கூடியிருந்த மக்களிடம் சிலுவை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அல்லது பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுதல் குறித்து பேசவில்ûல் அந்த மூப்பர்கள் இவைகள் அனைத்தையும் கிரகித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. அவர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த அறிவு மற்றும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த எதிர்பார்ப்பு இவைகளுடன் பவுல் தனது செய்தியை தொடர்புபடுத்தினான்.
பரிசேயர்கள் எதிர்பார்த்தது போல் பவுல் கூறிய கிறிஸ்து இல்லையென்றாலும், இந்த சாட்சி அவர்களை தட்டியெழுப்பியது, இயேசு தனக்கு காட்சியளித்ததை பவுல் அந்த முற்றத்தில் கூறியபோது அவர்கள் அதைக் கேட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட காரியங்களின் சாத்தியக்கூற்றை பரிசேயர்கள் நம்பினார்கள். அப்படிப்பட்ட இறைவெளிப்பாடுகளுக்கு எதிர்த்து நிற்க கமாலியேல் முதற்கொண்டு எவருக்கும் துணிவில்லை. அவர்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லையென்றாலும், அவனைத் தண்டிப்பதற்கு மறுத்தார்கள். இயேசுவின் மரணத்திற்கு பின்பு அவரது பிரசன்னத்தை அவர்களால் மறுக்க முடியவில்லை. கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும் இடையே கலகம் ஏற்பட்டது. மதங்களில் அஸ்திபாரங்கள், வெளிப்பாடு, இறைவார்த்தை மற்றும் தரிசனங்கள் குறித்து பவுல் பேசினான். யூதர்களின் ஆலோசனைச் சங்கத்திற்குள் காணப்பட்ட தவறுகள் மற்றும் பிரிவினைகளுக்கு இவைகளே காரணமாகவும் இருந்தன.
ரோம சேனாதிபதி இப்போது குறுக்கிட்டான். கோபம் நிறைந்த கூட்டத்தினர் மத்தியில் இருந்து பவுலை கொண்டு செல்லும்படி சேவகர்களுக்கு கட்டளையிட்டான். பவுலுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் காரணத்தை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. முக்கியமான மதத்தலைவர்கள் மத்தியில் ஏன் கூச்சல் மிகுந்த சப்தம் ஏற்பட்டது என்றும் புரியவில்லை. அவனுடைய கடமையை நிறைவேற்றி, ஆலோசனைச் சங்கத்து உறுப்பினர்களின் கைகளில் இருந்து அவன் பவுலை தப்புவித்தான். தேசத்து தலைவர்களுக்கு விடுவிக்கப்பட்ட கிறிஸ்துவின் இறுதி அழைப்பை யூத ஆலோசனைச் சங்கம் புரிந்து கொள்ளவில்லை. பவுல் தனது உள்ளான விசுவாசத்தை வெளிப்படுத்தவும், இயேசுவின் நாமத்தைக் குறித்து வலியுறுத்தி பேசவும் ஆரம்பிக்கவில்லை. மனச்சாட்சி மற்றும் வெளிப்பாடுகளைக் குறித்த ஆரம்பநிலைக் கேள்விகளை உள்ளடக்கியதாகவே அனைத்து காரியங்களும் இருந்தன. அது விசுவாசத்தின் இதயப் பகுதியை இன்னமும் சென்றடையவில்லை. இவ்விதமாக மனந்திரும்புவதற்கான கடைசி சந்தர்ப்பத்தையும் யூதத் தலைவர்கள் தவறவிட்டார்கள். அவர்களது முடிவு நெருங்கியது.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, உமது பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தைக் கேட்க எங்கள் செவிகளைத் திறந்தருளும். அப்போது நாங்கள் உமது வார்த்தைகளை புரிந்துகொள்வோம். உமது வெளிப்பாடுகளால் எங்கள் இருதயங்களை ஆட்கொள்ளும். உமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் எங்கள் மனச்சாட்சிகளை பரிசுத்தப்படுத்தும். விசுவாசமுள்ள கீழ்ப்படிதலுக்கு நேராக எங்களை வழிநடத்தும். நாங்கள் உமக்கும், உம்முடைய பரலோக பிதாவிற்கும் எல்லா நேரங்களிலும் சேவைபுரிய உதவும்.
கேள்வி:
- ஏன் பவுல் நியாயப்பிரமாணத்தின் மீது சாராமல், தனது மனச்சாட்சியின் மீது சார்ந்து கொண்டான்? வரப்போகின்ற கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மற்றும் மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஆகிய நம்பிக்கைகளின் விளைவாக பரிசேயர்கள் ஏன் பவுல் தண்டிக்கப்படாதிருக்க எண்ணினார்கள்?