Previous Lesson -- Next Lesson
4. தனது தேச மக்கள் முன்பு பவுலின் வாதம் (அப்போஸ்தலர் 22:1-29)
அப்போஸ்தலர் 22:17-21
17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.18 அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.19 அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,20 உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.21 அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
கிருபையின் நற்செய்தி அல்லது ஞானஸ்நானத்தின் அடையாளத்தை பவுல் உருவாக்கவில்லை. இயேசு தன்னுடைய மகிமையுள்ள குணாதிசயத்தை சாட்சி பகரும்படி அவனுக்கு கட்டளையிட்டார். அவர் ஒருவர் மட்டுமே இறைவனை அடையும் ஒரே வழி ஆவார். சிலுவையில் அறையப்பட்டு, தேசத்தால் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ்து இப்போது, இறைவன் வாசம்பண்ணும் தேவாலயத்து பிரகாரத்தில் மக்கள் கூட்டத்தின் முன்பு பவுலின் சாட்சியின் மூலமாக கிறிஸ்து தோன்றினார். ஒவ்வொரு யூதனுடைய இருதயத்தையும் அவனுடைய வார்த்தைகள் நொறுக்கியது, முதலாவது இயேசுவே மெய்யான தேவன் என்றும் அவர் பரிசுத்தமானவருடன் நித்தியமாக இணைந்திருப்பவர் என்றும் கூறினான். இரண்டாவது பவுலின் சாட்சி யூதர்கள் இயேசுவை கொலை செய்தவர்கள் என்பதை தெளிவுபடுத்தியது. இறைவனுடைய குமாரனை கொலை செய்தவர்கள் மற்றும் அவருடைய மகிமையை உணராதிருந்தது ஆகிய காரணத்திற்காக யூதர்கள் அழிவுக்கு நேராக நியாயந்தீர்க்கப்பட்டார்கள். பவுலைத் தவிர இயேசுவைக் கண்டவர்கள் வேறு யாரும் அப்போது தேவாலயத்தில் இருக்கவில்லை.
தமஸ்குவில் ஆண்டவர் நேரடியாக தன்னை பவுலுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் இப்போது தேவாலயத்தில் பவுலின் சாட்சி மூலம் தன்னை வெளிப்படுத்தினார். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பது உண்மையான ஒன்று. இயேசுவின் மகிமையைக் குறித்து பவுல் கூறிய சாட்சி என்பது சத்தியத்தில் பிறந்த ஒரு காரியம் ஆகும். நியாயப்பிரமாணத்தின் காரியங்களை பவுல் விவாதிக்கவில்லை. உயிருள்ள இயேசுவைக் குறித்து சாட்சி பகர்ந்தான்.
இயேசு தனது மகிழ்ச்சிக்காக மட்டும் தன்னுடைய வேலைக்காரனுக்கு தன்னை வெளிப்படுத்தவில்லை. மாறாக உலகம் முழுவதும் இறைவனுடைய சபையை கட்டும்படியாக அப்படிச் செய்தார். அவர் அவனுக்கு கட்டளையிட்டார், “எழுந்திரு, அமர்ந்திராதே எருசலேமையும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் விட்டுச்செல். புறஜாதிகளிடத்தில் போகும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். இருப்பினும் பவுல் தூரமாகச் செல்லவில்லை. இயேசு தனக்கு காட்சியளித்த இறைவன் வாசம்பண்ணும் இடத்திற்கு அருகாமையில் இருப்பதை விரும்பினான். இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை யூதர்களுக்கு சாட்சியாக வலியுறுத்திக் கூற முற்பட்டான். தனது சாட்சியை அவர்கள் விசுவாசிப்பார்கள் என்று நம்பினான். ஸ்தேவான் கல்லெறியப்படும்போது சாட்சியாக இருந்தவனும், கிறிஸ்தவர்களைக் கொலை செய்தவன் என்று அறியப்பட்டவனுமாக பவுல் காணப்பட்டான்.
பவுலின் சரீரமும், சித்தமும் செயல்படுவதில் மந்தமாய் இருந்தது. அவன் புறஜாதிகளுக்கு பிரசங்கிப்பதில் ஆர்வம் கொள்ளவில்û. விக்கிரக ஆராதனைக் காரர்களை இறைவனுடனான உடன்படிக்கையில் கொண்டு வரவும் முயலவில்லை. அவனுடைய உயிருள்ள ஆண்டவர் புறஜாதிகளிடம் போகும்படி அவனுக்கு தெளிவாக கட்டளையிட்டிருந்தார். அவனுடைய வசதியான சூழலைவிட்டு அவன் வெளிவரும்படியாக கடவுள் செயல்பட்டார். ஏனெனில் புதிய ஏற்பாட்டின் செய்தியானது எல்லா மனிதர்களுக்கும் உரியது. அது யூதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பழைய ஏற்பாட்டின் எல்லைகளை ஆண்டவர் இயேசு தாமே விரிவுபடுத்தியிருந்தார். எல்லா மனிதர்களுக்கும் இறைவனுக்கு நேரான கதவு திறக்கும்படி வழிநடத்தினார். புறஜாதிகளின் யூகம் தொடங்கிவிட்டது. இறைவனை உண்மையாய் தேடும் அனைவரின் மேலும் அவரது கிருபை பொழிந்தருள ஆரம்பித்தது.
அப்போஸ்தலர் 22:22-29
22 இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.23 இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,24 சேனாதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.25 அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.27 அப்பொழுது சேனாதிபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.28 சேனாதிபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.29 அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
சர்வவல்லவர் ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தார். அவனது சந்ததி என்பதில் யூதர்கள் பெருமிதம் கொண்டார்கள். மோசேயுடன் அவருடைய உடன்படிக்கையில் கூறப்பட்ட இறைவனது வாக்குத்தத்தங்களை பிடித்துக் கொண்டார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், இறைவனுடனான ஐக்கியத்தில் தூய்மையற்ற புறஜாதிகள் அனுமதிக்கப்படுவது என்பது விசுவாசிப்பதற்கு இயலாத காரியமாக இருந்தது. அவர்கள் இறைவனுடைய பிரசன்னம் தங்களுடன் இருப்பதற்கான ஆதாரமாக நியாயப்பிரமாணம், விருத்தசேதனம், ஓய்வுநாள் மற்றும் தேவாலயத்தை கருதினார்கள். இவ்வளவு விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று கற்பனையில் கூட அவர்களால் நினைக்க முடியவில்லை. நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல், விசுவாசத்தின் மூலமாக அனைத்து கிருபைகளையும் புறஜாதிகள் பெற இயலும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவாக அவர்கள் கொந்தளிப்படைந்தார்கள். சத்தியத்தை திரித்து பேசுபவனாக, பவுலைக் கண்டார்கள். அவன் இறைதூஷணம் செய்பவன், இறைவனுக்கு எதிரி என்றார்கள். அவனை அழிக்க வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். பெருந்திரள் கூட்டத்தின் உக்கிரகோபம் வெளிப்பட்டது. தங்கள் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டார்கள். ஆகாயத்தில் புழுதியைத் தூற்றினார்க்ள. கலகம் நிறைந்த கூட்டத்தின் மத்தியிலும் பவுல் பாதுகாக்கப்பட்டவனாக நின்றான். மனந்திரும்புவதற்கான கிறிஸ்துவின் இறுதி அழைப்பையும் யூதர்கள் உணரவில்லை. இயேசுவே மக்களிடம் பவுலை அனுப்பினார். பவுல் தானாக செல்லவில்லை. இறைவனுடைய ஆவிக்கு எதிராக யூதர்களின் மனம் முழுவதும் கடினப்பட்டிருந்தது.
மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவிற்கு லூக்கா இந்த புத்தகத்தை எழுதும்போது பவுல் ஒரு ரோமன் என்று அறிந்த பின்பு எவ்விதம் ரோம அதிகாரிகள் அவனை கனத்துடன் நடத்தினார்கள் என்பதைக் குறிப்பிடுகிறான். துன்புறுத்தலின் மூலமாக பவுலிடம் இருந்து ஒரு வாக்கு மூலத்தை வலுக்கட்டாயமாக பெற அவர்கள் முனைந்தார்கள். எபிரெய மொழியில் பேசப்பட்ட பவுலின் பேச்சை அந்த சேனாபதி புரிந்துகொள்ள இயலவில்லை. பவுலின் பேச்சின் விளைவாக ஏற்பட்ட யூதர்களின் மிருகத்தனமான, கட்டுங்கடங்காத செயலை அவனால் காண முடிந்தது.
பவுல் மரிப்பதற்கு ஆயத்தமாக இருந்த போதிலும், அந்த தருணத்திலும் கிறிஸ்துவிற்கு சாட்சியாக நிலைத்திருப்பதில் உறுதியாக இருந்தான். தனது விடுதலைக்காக ரோமக் குடிமகன் என்ற தனது உரிமையை பயன்படுத்த அவன் ஆயத்தமாக இருந்தான். அந்த சேனாதிபதியிடம் தான் ரோமக் குடிமகன் என்பதை தெரிவித்தான். முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமல் ரோமக் குடிமகனை குற்றவாளி என்று தீர்ப்பிட்டு தண்டிக்கமுனைந்தால் அவர்கள் மரணதண்டனை அடைய நேரிடும். எனவே ஆயிரம் போர் வீரர்களுக்கு அதிபதி பவுலிடம் விரைந்து வந்தான். ரோமக் குடிமகனை சங்கிலியால் கட்டியதற்காகப் பயந்தான். அப்போஸ்தலனின் இந்த வாதத்தின் மூலம் அவனது பெற்றோர்களைக் குறித்து ஒரு குறிப்பை அறிய முடிகிறது. ஆன்டனி சீசர் (ரோம மன்னன்) கிளியோபெட்ராவை திருமணம் செய்த பிறகு தர்சுவிற்கு வந்தான். அந்நேரத்தில் அந்தப் பட்டணத்தின் அனைத்து மக்களுக்கும் ரோமக் குடியுரிமை வழங்கப்பட்டது. பவுல் அவனது பெற்றோர்கள் மூலம் அடைந்த இந்த உரிமை இல்லையென்றால், கூர்மையான முற்கள் பதிந்த சவுக்கு, பவுலின் சரீரத்தை துளைத்திருக்கும். அவனது முதுகு இயேசுவிற்கு நிகழ்ந்ததுபோல சவுக்கடியால் உழப்பட்டிருக்கும்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எல்லா மக்கள் மத்தியில் நாங்கள் தகுதியற்றவர்களாக இருந்த போதும் நீர் எங்களைத் தெரிந்து கொண்டீர். உமது கிருபையால் நியாயப்பிரமாணத்தை நாங்கள் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக மாறினோம். எங்கள் இயலாமைக்காக எங்களை மன்னியும். பரிசுத்தமாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். உமது அன்பிற்கு முன் நாங்கள் களங்கமற்று காணப்படவும், உமது இரட்சிப்பை அனைத்து மனிதர்களுக்கும் பறைசாற்றவும் உதவிசெய்யும். அமைதியாய் இருக்காமல் பேசும்படி எங்களுக்கு கிருபை செய்யும்.
கேள்வி:
- புறஜாதிகளிடம் இயேசு தன்னை அனுப்பியதாக பவுல் கூறிய போது ஏன் யூதர்கள் கோபத்துடன் கிளர்ந்தெழுந்தார்கள்?