Previous Lesson -- Next Lesson
9. பிஷப்மார்கள் மற்றும் மூப்பர்களுக்கு பவுல் அளித்த பிரசங்கம் (அப்போஸ்தலர் 20:17-38)
அப்போஸ்தலர் 20:17-24
7 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.18 அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.22 இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
மிலேத்து தீவு துறைமுகத்தில் பவுலின் கப்பல் நின்றது. எபேசு பட்டணம் 60 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது. இருப்பினும் எபேசு மற்றும் ஆசியா மாகாணத்தின் சபைத் தலைவர்கள் மற்றும் மூப்பர்களை வரும்படியாக அப்போஸ்தலன் கேட்டுக் கொண்டான். அந்தப் பட்டணத்து மக்கள் அவனுக்கு எதிராக கலகம் செய்ததின் நிமித்தம், அங்கு சென்று அவர்களை சந்திப்பது உகந்த செயல் அல்ல என்று எண்ணினான். உண்மையுள்ள சகோதரர்கள் அவனைப் பார்க்கும்படி விரைந்தார்கள். கிறிஸ்துவுக்குள்ளான அவர்களது ஆவிக்குரிய தகப்பனிடம், இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெறும்படி விரைந்தார்கள். பரிசுத்த ஆவியானவருக்குள் அவர்களது ஊழியத்திற்கான வல்லமையை பெற்றுக் கொண்டார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் பவுல் தன்னுடைய உடன் வேலையாட்கள் மற்றும் சபைகளின் ஊழியர்களுக்கு அளித்த ஒப்பற்ற பிரசங்கத்தை பவுல் நமக்குத் தருகிறார். இந்த செய்தியின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாக கவனிப்பது ஒவ்வொரு விசுவாசிக்கும், கிறிஸ்துவின் ஊழியருக்கும் நன்மையாக இருக்கும். நற்செய்தியை பிரசங்கிப்பதிலும், சபை பணிகளை செய்வதிலும் எப்படி கனி நிறைந்த நிலையை அடைய முடியும் என்பதற்காக வழிநடத்துதலை உள்ளடக்கியுள்ளது. பவுல் மூன்று குறிப்புகளை முன் வைக்கிறார்.
எல்லா நாடுகளுக்குமான கிறிஸ்துவின் தூதராக பவுல் இருந்தார். இருப்பினும் அவர் எளிமையுடன் தாழ்மையுள்ள ஊழியக்காரனாக, கிறிஸ்து சாந்தம் மற்றும் மனத்தாழ்மையுடன் இருப்பதைப் போல வந்தார். இந்த குணநலன்களுடன் சபைக்கு வராதவர்கள் சபையை அழிக்கிறார்கள். தங்களது ஊழியத்திலும், பணியிலும் இந்த நற்பண்புகளை வெளிப்படுத்தாதவர்கள், கட்டுவதற்கு பதிலாக சபையை அழிக்கிறார்கள், இடிக்கிறார்கள்.
முதல் பகுதியில் இவ்விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவருடைய பணியில் அவருக்காக ஊழியம் செய்வதின் நோக்கம் சபை என்பது அல்ல, ஆண்டவர் மட்டுமே நமது நோக்கமாக இருக்கிறார். ஏனெனில் அவர் முன்பாக நாம் கணக்கு கொடுக்க வேண்டியவர்கள். அவர்கள் அவரை நேசிக்கிறார்கள். சபையை பரிசுத்தமுள்ள மணவாட்டியாக அவருக்கு முன்பு நிறுத்த விரும்புகிறார்கள். இந்த ஊழியம் தேனின் சுவையைப் போல இனிமையானது அல்ல. இது பாவத்தின் கட்டுகளில் இருந்து அடிமைகளை விடுவிக்கிறது. பாவத்தில் விழுந்து போனவர்களை தூய்மைப்படுத்துகிறது. துன்மார்க்கர்களின் கடினத் தன்மையை தாங்கிக் கொள்கிறது. நீடிய பொறுமையுடன் ஆவிக்குரிய குழந்தைகளை வழிநடத்துகிறது. அவர்களை துன்புறுத்தும் எதிரிகளை ஆசீர்வதிக்கின்றது. பிசாசின் முதலாவது இலக்கு, ஆண்டவரின் ஊழியர்களை தாக்குவது ஆகும். இறைவனின் உன்னத அன்பில் இருந்து அவர்கள் விபசாரம் மற்றும் பகை போன்ற பாவங்களில் விழும்படி தூண்டுகிறது. அவனது சோதனைகள், தந்திரங்கள் மற்றும் வன்முறைகள் மூலம் இதைச் செய்கிறான். ஆகவே தான் கர்த்தருடைய ஊழியம் என்பது கண்ணீர்கள், துன்பங்கள் மற்றும் போராட்டங்கள் மத்தியில் நடக்கிறது என்பதையும், சுவையான கனிகள், மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் ஓய்வு இவைகளின் மத்தியில் இல்லை என்பதையும் பவுல் சாட்சியிடுகிறார். ஆண்டவருக்காக பணி செய்ய விரும்புபவன் பாடுகள், புறக்கணிப்பு மற்றும் அவமானத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் வசதிகளை வளர்த்துக் கொள்ள நாடக்கூடாது.
திருச்சபைக்கு முன்பாக தூய்மையான கிறிஸ்தவ கொள்கையை பவுல் தனது வாழ்வு மற்றும் குணங்கள் மூலம் வெளிப்படுத்தினான். அவன் சொன்னதைப் போல வாழ்ந்தான். அவனது பிரங்கமும் வாழ்வும் ஒன்றாய் இருந்தது. அவனது நல் மாதிரி மற்றும் அவனது நற்செய்தியின் செய்தி ஒன்றாய் இருந்தது. அவனது வார்த்தைகளைப் போலவே அவனது செயல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. கிறிஸ்துவின் மீட்பு, அன்பு மற்றும் வல்லமைக்கு காணக்கூடிய சாட்சியாக நமது சூழ்நிலைகளின் மத்தியில் நமது வாழ்வும், நடத்தையும் உள்ளது. உங்களில் வெளிப்படாத ஒன்றை உங்கள் வாசகர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். உங்களது பிரசங்கத்தின் அஸ்திபாரம் உங்களது நடத்தை ஆகும்.
பவுல் தனது நற்செய்தியின் முக்கியத்துவத்தையும், அர்த்தத்தையும் வெளிப்படுத்த பின்வரும் மூன்று முறைகளை பின்பற்றுகிறார். பிரசங்கம், கற்றுக்கொடுத்தல் மற்றும் உபதேசம் ஆகியவை ஆகும். அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணமாக ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வார்த்தையை கண்டான். ஆவிக்குரிய பலமான உணவை அவன் குழந்தைகளுக்கு கொடுக்கவில்லை. அவர்கள் நற்செய்தியை புரிந்துகொள்ளவும், கிரகித்துக் கொள்ளவும் பால் வழங்கினான். கிறிஸ்துவில் விசுவாசிகளின் வளர்ச்சியே அவனது சாட்சியின் இலக்காக இருந்தது. அவர்கள் இறைவனுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும் செய்தான். அவர்களுக்குள் ஆவிக்குரிய வாழ்வு நிலை நாட்டப்படுவதற்கு எந்தவொரு வைட்டமினும் குறையாத படி செயல்பட்டான். பவுல் கிறிஸ்துவின் கிருபை மற்றும் இறைவனின் வாக்குத்தத்தங்களுடன் துவங்கிய இறைவனின் முழுமையான மீட்பின் திட்டத்தை சபைக்கு வெளிப்படுத்தினான். ஆவியில் நிறைந்த வாழ்வை புரிந்துகொள்ளும்படி செயல்பட்டான். நற்செய்தியின் ஆசீர்வாதங்கள், வல்லமைகள் மற்றும் ஆறுதல்களுக்கு நேராக விசுவாசிகளை அவன் வழிநடத்தினான். கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தப்படவும், நம்பிக்கையுடனிருக்கவும் அவர்களை வேண்டிக் கொண்டான். இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு மகிமையைக் கொண்டு வர செயல்பட்டான்.
சபைக் கூட்டங்களில் பிரசங்கங்கள் மற்றும் போதனைகளைக் கொடுப்பதில் மட்டும் பவுல் திருப்தியடையவில்லை. அவன் வீடுகளுக்குச் சென்று குடும்பங்களை சந்தித்தான். வியாபாரம் பண்ணும் இடங்களில், தெருக்களில் சென்று தனிநபர்களுடன் பேசினான். இறைவனின் கோபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், கிறிஸ்துவின் கிருபையில் தொடர்ந்திருக்கவும் அவர்களை வேண்டிக்கொண்டான்.
மனந்திரும்புதல், இறைவனிடம் திரும்புதல் மற்றும் மனமாற்றம் ஆகியவை பவுலின் பிரசங்கத்தின் முக்கியமான பொருளாகும். இந்த உலகில் நிகழ்கால மற்றும் எதிர்கால நம்பிக்கை இல்லாத சூழலில் கிறிஸ்துவில் மட்டுமே நம்பிக்கை உண்டு என்பது அவரது இரண்டாவது இலக்காக இருந்தது. நமது நம்பிக்கை கிறிஸ்து இயேசுவில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்துவுடனான ஐக்கியம் என்பது நமது விசுவாசத்தின் ஆதாரம் ஆகும். அவரது வாழ்வு மற்றும் ஆள்த்துவம் ஆகியவற்றை கேட்பதில் அது துவங்குகிறது. அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது. அவரது வருகைக்கான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
நாம் அவரை சேரும் முன்பு அவர் நம்மை சேர்த்துக் கொண்டார். இறைவனுடன் நம்மை ஒப்புரவாக்கிக் கொண்டார். நாம் மனந்திரும்ப அவர் காத்திருக்கிறார். அவருடைய அன்பினால் நம்மை அவருடன் இணைத்துக் கொண்டார். வழிவிலகிப் போன நம்மை ஏற்றுக்கொண்டார். நம்மை பரிசுத்தப்படுத்தினார், தூய்மைப்படுத்தினார், அவருடைய பரிசுத்த ஆவியினால் நம்மை நிரப்பினார். பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் நம்மை சேர்த்துக் கொண்டார். இறைவனுக்கு பணிபுரிய நம்மை அழைத்தார். நாம் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் இரண்டுவித இயக்கத்தைக் காண்கிறோம். ஒன்று நாம் அவரிடத்தில் செல்வது, மற்றொன்று அவர் நம்மிடத்தில் வருவது. நீங்கள் கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் சந்தித்திருக்கிறீர்களா? அவருடைய புதிய ஏற்பாட்டு போதனைகளில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்களா? அவர் உங்களை இரட்சிக்க ஆயத்தமாக இருக்கிறார்? நீங்கள் அவரில் விசுவாசம் வைத்துள்ளீர்களா?
தான் ஆவியில் கட்டுண்டவனாக இருப்பதாக பவுல் கூறினான். கிறிஸ்துவிலும், கிறிஸ்துவிற்காகவும் வாழ்ந்த அவரது உலக வாழ்க்கையின் சுதந்திரம் கட்டப்பட்டிருந்தது. அவன் தனது சொந்த வழிகளில் செல்லவில்லை. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காக எல்லா நேரத்திலும் கவனித்துக் கொண்டிருந்தான். இந்த இறை வழிகாட்டியே அவனை எருசலேமிற்கு அனுப்பினார். அப்போஸ்தல வாழ்வின் இறுதியில் அங்கே அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும் உபத்திரவங்களை அவனுக்கு முன்னறிவித்தார். அவனது ஆண்டவரும் எருசலேமில் வாழ்வின் இறுதிப்பகுதியில் துன்புறுத்தப்பட்டார். பவுலுக்கு பலனும், மதிப்பும் கனியாக கிடைக்கவில்லை. மாறாக துன்பங்கள், சிறையிருப்பு மற்றும் எதிர்ப்பு ஏற்பட்டது.
பவுல் தான் சந்திக்க வேண்டிய சூழ்நிலையை விட்டு ஓடிப்போகவில்லை. அதை கவனத்துடன் அணுகினான். அவன் தன்னை முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க நபராக கருதவில்லை. தனது வாழ்க்கை வரலாறை எழுதி வைக்கவில்லை. அல்லது தனது சொந்த அனுபவங்களை பதிவு செய்யவும் இல்லை. அவன் தன்னை அப்பிரயோஜனமான ஊழியக்காரனாக கருதினான். ஜீவனுள்ள ஆண்டவரின் பணிக்காக அவரையை முழுமையாக நம்பினான். நமது சொந்த வாழ்விலும் ஆண்டவர் அதே மனப்பான்மையை நமக்குத் தந்து அருளட்டும். நாமும் அவ்விதமாக அப்பிரயோஜனமற்றவர்களாக நம்மை எண்ணுகிறோமா? அப்போது ஆண்டவர் இயேசுவே நமக்கு எல்லாமுமாக இருப்பார்.
தனது சுய விருப்புக்கு அப்பாற்பட்டு, பவுல், மற்ற இரண்டு காரியங்களை விரும்பினான். முதலாவது அவனுக்கு நேரிடவிருந்த துன்பங்கள், சோதனைகள் மத்தியில் பகைமை மற்றும் எதிர்த்து செயல்படுதல் போன்றவற்றில் ஈடுபடாமல், அவனது ஆண்டவருக்கு உண்மையாய் தொடர்ந்திருக்க விரும்பினான். தனது எதிரிகளை நேசிக்கவும், அவர்களது கோபங்கள் மத்தியில் அவர்களை மன்னிக்கவும், பரிசுத்தம் மற்றும் கிருபையில் தொடர்ந்திருக்கவும் விரும்பினான். இரண்டாவது தனது நடத்தையில் உண்மையாய் இருப்பதில் மட்டும் அவன் திருப்தி அடையாமல், தனது பரிசுத்த அழைப்பை நிறைவேற்றி முடிக்க விரும்பினான். அவன் தனக்காக வாழவில்லை. அவனது ஆண்டவருக்காக மற்றும் அவரது சபைக்காக வாழ்ந்தான். பவுல் இந்த ஊழியத்தை தேடவில்லை. அவன் தானாக இந்த ஊழியத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. கிறிஸ்து அவனை தெரிந்து கொண்டார். அவனது அழைப்பை நிறைவேற்றி முடிக்க பெலனைக் கொடுத்தார்.
பவுலின் ஊழிய வாழ்க்கையின் சுருக்கம் என்ன? அது இறைவனின் கிருபைக்கான சாட்சி ஆகும். பரிசுத்த இறைவன் தமது கோபாக்கினையை நம்மீது வெளிப்படுத்தாமல் உள்ளார். ஏனெனில் கிறிஸ்து நம்மை நீதிமானாக்கியிருக்கிறார். அவர் நம்முடைய பிதாவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அவரது குமாரன் இயேசுவை நேசிக்கும் அனைவருக்கும் பரிசுத்த ஆவியை வழங்குகின்றார். சீர்கேடடைந்த பாவிகள் மத்தியில் இருந்து அவர் தமது பரிசுத்த பிள்ளைகளை உண்டுபண்ணுகிறார். இது அற்புதமான, மகத்துவமான கிருபை அல்லவா?
விண்ணப்பம்: பரலோக பிதாவே, மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் துதியுடன் நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களது அநேக பாவங்கள் நிமித்தம் நீர் எங்களை அழித்துவிடவில்லை. இயேசு கிறிஸ்துவிற்குள் எங்கள் மீது இரக்கம் பாராட்டினீர். கிருபையினால் உமது பிள்ளைகளாக எங்களை உருவாக்கினீர். இந்த கிருபைக்கு பாத்திரவான்களாக நடக்க எங்களுக்கு உதவும். நம்பிக்கையற்ற மக்களுக்கு உமது அற்புத இரக்கத்தைக் குறித்து பிரசங்கிக்க உதவும்.
கேள்வி:
- அப்போஸ்தலனாகிய பவுலின் பிரசங்கத்தின் தன்மை, உள்ளடக்கம் மற்றும் சுருக்கம் என்ன?