Previous Lesson -- Next Lesson
4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)
அப்போஸ்தலர் 16:16-18
16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.18 இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.
அப்போஸ்தலனாகிய யோவான் கூறுவது போல இந்த உலகம் பிசாசுகளினால் நிறைந்து காணப்படுகிறது “முழு உலகமும் தீமை நிறைந்த ஒருவனால் ஊசலாடிக் கொண்டிருக்கிறது”. இன்றைக்கும் கூட சில சமயங்களில் நாம் வெளிப்படையாக அவைகளின் அதிகாரத்தைப பார்க்கிறோம். தந்திரமாக செயல்படக் கூடிய பிசாசுகளைக் காண்கிறோம். இயேசுவின் காலத்தில் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவன் எல்லா ஒளிக்கும் ஆதாரமானவரை நோக்கி ஓடி வந்து சத்தமிட்டான், “எங்களுக்கும் உமக்கும் என்ன? நீர் இறைவனுடைய பரிசுத்தர். நீர் ஏன் எங்களை அழிக்க வந்தீர்?” இதைப் போல குறி சொல்லுகிற ஒரு பெண் பவுலின் ஆவியினால் கவரப்பட்டும், அவனது உடன்பணியாட்களின் அன்பினால் ஈர்க்கப்பட்டும் இப்படிச் செய்தாள். அவள் உரத்த சத்தமிட்டாள். “மக்களே! பாருங்கள்! உன்னதமான இறைவனின் அப்போஸ்தலர்கள் இந்த மனிதர்கள்! நீங்கள் தீய ஆவிகள் மற்றும் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.
இந்த குறி சொல்லுகிற பெண், பட்டணம் முழுவதையும் அறிந்திருந்தாள். மக்கள் அவளைப் பார்த்து சிரித்தார்கள். அதே சமயத்தில் அவளைக் குறித்து பயந்தும் இருந்தார்கள். அவளது வாயின் வார்த்தைகளுக்கு அநேகர் கவனமாக செவி கொடுத்தார்கள். சாத்தானின் கையில் வீழ்ந்தவர்களாக, தங்களது எதிர்காலத்தை வெளிப்படுத்திக் கூறும்படி அவளை கேட்டுக் கொண்டார்கள். அருமையான சகோதரனே, இப்படிப்பட்ட மக்களிடம், அவர்கள் உங்களை குணமாக்குவார்கள் என்று நம்பி போகாதீர்கள். அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை உங்களை அவர்களது ஆவியுடன் கட்டிவிடுகிறது. பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த, இந்தப் பெண்ணின் மீது பவுல் கோபமுற்றான். ஏன்? அவன் தனது உள்ளான மனதில் இருந்து வரக்கூடிய ஒரு வேறுபட்ட சத்தத்தைக் கேட்டான். தனது நற்செய்திக்கான நல்ல அறிக்கையாக அவளது வார்த்தைகள் இல்லை என்பதை பவுல் அறிந்தான். இந்த ஏமாற்றும் ஆவியினால் தனது பிரசங்கத்தின் மூலம் முழுப்பட்டணமும் கவர்ந்திழுக்கப்படுவது தடையாகும் என நினைத்தான்.
மேலும் பவுல் சாத்தானின் ஆவியைக் குறித்து அறிந்திருந்தான். சாத்தான் பொய்யனும், பொய்க்கும் பிதாவுமாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவின் ஆவி அல்ல. பரிசுத்த ஆவியானவர் பிரசங்கிக்கும் போது, அவருக்கு துணைபுரியும் நோக்கமும் இவனுக்குக் கிடையாது. அவள் பொய் பேசும் போது அதில் அநேக சத்தியங்களைக் கூறினாலும் பிசாசுக்கு இந்த நோக்கம் கிடையாது.
நமது இறைவன், கடவுள்கள், ஆவிகள் மற்றும் பிசாசுகள் மத்தியில் உன்னதமான ஒருவராக இருக்கிறார். அவர் ஒருவராய், ஒப்பற்ற இறைவனாக இருக்கிறார். அவரைப் போல எந்த ஒரு கடவுளும் இல்லை. அந்த குறிப்பிட்ட காலத்தில் கிரேக்க உலகம் அநேக தெய்வங்கள் மற்றும் ஆவிகளில் நம்பிக்கை கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் அறிக்கை நற்செய்தியின் ஒரே இறைவன் மீதான விசுவாசத்தை கறைப்படுத்துவதாக இருந்தது.
மேலும் சாத்தானின் ஆவி இறைவனை அவருடைய சாராம்சத்துடன் அறிந்திருக்கவில்லை. அவர் பரிசுத்தபிதா என்றும், அவருடைய வலது பாரிசத்தில், அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்து வீற்றிருப்பதையும், அவருடன் இணைந்து பரிசுத்த ஆவியானவரும் ஆளுகை செய்கிறார் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சிலுவையின் மூலம் மட்டுமே மீட்பிற்கான அடிப்படை உள்ளது. பவுலும், அவனது கூட்டாளிகளும் இறைவனின் பிள்ளைகள் என்றோ அல்லது அவருடைய வேலைக்காரர்கள் என்றோ அந்த தீய ஆவி அறிக்கையிடவில்லை. உண்மையான இரட்சிப்பு என்பது நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல, அது மரணம் மற்றும் சாத்தானிடமிருந்தும் நம்மை விடுவிப்பது ஆகும். மேலும் நமக்கு புத்திர சுவிகாரம் அளிக்கிறது. இரண்டாம் பிறப்பைத் தருகின்றது. உன்னதமானவரின் பிள்ளைகளாக நம்மை மாற்றுகின்றது.
ஒருவேளை தீயஆவி படைத்தவரையும், அவருடைய மீட்பையும் குறித்து பேசினாலும் இறைவனையும், இரட்சிப்பின் இருதயத்தையும் மறுதலிக்கின்றது. அவன் உண்மையை திரித்து கூறி, கிறிஸ்துவின் திட்டத்திற்கு எதிராக கொண்டு வருகிறான். கிறிஸ்துவானவர் மனிதன் தன்னை பிரதிபலிக்க விரும்புகிறார். மனிதன் பாவத்தை குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்து மனந்திரும்ப முடியும். அவர்கள் மீது பிரதிபலிக்கும் வார்த்தைகளைக் கேட்டு விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட முடியும்.
அந்தப் பெண் தீய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதை பவுல் அறிந்துகொண்டான். அவருடைய துன்பப்படும் ஆத்துமாவை அவன் கண்டான். பிசாசின் வஞ்சனையில் சிக்கிய மில்லியன்கணக்கான மக்களையும், பிசாசின் அசுத்தமான காரியத்தையும் அவன் கண்டு துயரப்பட்டான். அப்போஸ்தலன் இந்த பரிதாபமான பெண் மீது இரக்கம் கொண்டான். அசுத்த ஆவி அவளை விட்டு நீங்கும்படி கட்டளையிட்டான். கிறிஸ்து செய்தது போல தனது சொந்தப் பெயரில் அவன் அசுத்த ஆவியை துரத்தவில்லை. புறஜாதிகளின் அப்போஸ்தலன், தான் அப்பிரயோஜனமானவன் மற்றும் இயலாதவன் என்பதை அறிக்கையிட்டான். இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே இரட்சகர் என்பதை அறிந்திருந்தான். இவ்விதமாக அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அந்த அசுத்த ஆவி அவளை விட்டுப் போகும்படி கட்டளையிட்டான்.
இயேசு என்ற இந்த ஒப்பற்ற நாமம் நரகத்திலும் அறியப்பட்டிருக்கிறது. மதியீனமான மக்கள் குருடர்களாக, மத வைராக்கியத்துடன், அறியாமையில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் சத்தியத்தை அறியவில்லை. பவுலின் வார்த்தைகள் யார் உண்மையுள்ள ஆண்டவர் என்பதைக் காண்பித்தது. உயிருள்ள இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் பவுல் பிசாசின் பிரகடனத்தை தனது பிரசங்கத்திற்கு ஆதாரமாக பயன்படுத்தவில்லை. மாறாக அவன் துன்பப்படுகிற பெண்ணிடம் இருந்து நற்செய்தியின் வல்லமையினால் தீய ஆவியைத் துரத்தினான். அவளது உள்ளான நிலையில் இரட்சிப்பை கொண்டுவந்தான்.
இன்றும் இயேசுவின் நாமம் மிகப்பெரிய வல்லமையுள்ளதாக இருக்கிறது. நாம் விரும்புகிற வண்ணம் எந்த நேரத்திலும் இந்த நாமத்தை பயன்படுத்த இயலாது. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காக தாழ்மையுடன் காத்திருக்க வேண்டும். தனது முதல் சந்திப்பில் பவுல் அவளிடமிருந்து தீய ஆவியைத் துரத்தவில்லை. அநேக நாட்கள் கழித்து, அநேக விண்ணப்பங்களுக்குப் பின்பு, இயேசு விடுதலையைத் தர விரும்புகிறார் என்ற நிச்சயத்தைப் பெற்றவுடன் செயல்பட்டார். முழுக் காரியமும் ஒரு ஆற்றல் மிக்க வாக்கியத்தில் உணரப்படுகிறது. “இயேசு என்னும் நாமத்தில்” இன்றும் பரிசுத்த ஆவியின் பாதுகாப்பில் நடக்கிற ஒவ்வொருவரும் விண்ணப்பத்தின் மூலம் அசுத்த ஆவிகளைத் துரத்த முடியும். ஆகவே கவனமாயிருங்கள். அருமையான சகோதரனே, உங்கள் சொந்த பெயரில் எதையும் செய்யாதீர்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி சோதனைக்கு உட்பட வேண்டாம். அதற்குப் பதிலாக நற்செய்திக்கும், ஆவியானவருக்கும் உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்போது ஆண்டவரின் மேன்மையை உங்கள் மூலமாகவும், உங்களிலும் நீங்கள் காணமுடியும்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மை ஆராதிக்கிறோம். நீர் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பெண்ணிற்கு தீய ஆவியில் இருந்து விடுதலை கொடுத்தீர். நீர் இன்றும் கர்த்தாதி கர்த்தாவாக இருக்கிறீர். நீர் பிசாசின் கட்டுகளிலிருந்தும், கவர்ச்சிகரமான பொய்களிலிருந்தும் தனிநபர்களை விடுவிக்கிறீர். மில்லியன் கணக்கான மக்களின் கண்களைத் திறந்தருளும். அப்போது அவர்கள் தவறுகள், மதப் பொய்களை காண்பார்கள். உமது ஒப்பற்ற நாமத்தின் வல்லமையினால் இரட்சிக்கப்படுவார்கள்.
கேள்வி:
- பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த குறி சொல்லுபவளின் வார்த்தைகளில் காணப்பட்ட பொய் என்ன? பவுல் பேசிய காரியங்களைக் குறித்த உண்மை என்ன?