Previous Lesson -- Next Lesson
2. சிரியா மற்றும் அனடோலியாவின் சபைகளை திடப்படுத்துதல்: தீமோத்தேயுவை ஊழியத்திற்காக தெரிந்தெடுத்தல் (அப்போஸ்தலர் 16:1-5)
அப்போஸ்தலர் 16:1-5
1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.3 அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள்நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.4 அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள்.5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
அரங்குகள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் ஒளிந்து கொண்டிருந்த தர்சு பட்டணத்தை விட்டு பவுல் போனான். தர்சுவின் உயரமான கடினமான மலைப்பகுதிகளுக்கு சென்றான். அவன் அனடோலியாவின் வறண்ட மற்றும் வெப்பமான பகுதிகளில், உயரத்தில் வெறும் காலோடு நீண்ட தூரங்ளைக் கடந்தான். மிகப்பெரிய வலி மற்றும் வேதனைக்குப் பின்பு, அவன் தெர்பைக்கு வந்தான். இது லிக்கவோனியாவின் ஒரு பட்டணம் ஆகும். அவருடைய சபைகள் மீதான இந்த பொங்கி வழியும் வாஞ்சையை நாம் காண்கிறோம். பல்வேறு ஆபத்துகள் நிறைந்த இந்த பயணத்தின் போது அவன் தனது சொந்த பாதுகாப்பிற்காக எதையும் ஆயத்தப்படுத்தவில்லை. அவனுடைய பிரியமானவர்களைக் காண்பது தான் அவனது வாஞ்சை மற்றும் திட்டமாக இருந்தது. கிறிஸ்துவும் தமது பிரியமானவர்கள் மீதான வாஞ்சையினால் அவர்களோடிருக்கும்படி, அவர்களை மீட்பதற்காக சிலுவையில் மரித்தார். ஆண்டவர் நமக்காக ஏங்குகிறார். நமக்காக அவர் விரைவில் வரப்போகிறார்.
பவுலும், சீலாவும் தெர்பையில் விசுவாசிகளை திடப்படுத்தினார்கள். அந்தியோகியா சபை அவர்களுக்காக விண்ணப்பம் செய்வதைக் குறித்து கூறினார்கள். நியாயப்பிரமாணத்தில் இருந்து அவர்கள் பெற்றுள்ள விடுதலையை உறுதிப்படுத்தினார்கள். அதற்கு எருசலேமில் உள்ள தாய் சபையும் சம்மதித்திருந்தது. சீலா அந்த சபையின் அர்ப்பணமுள்ள அங்கத்தினர் ஆவார். ஆகவே அவர்களது அறிக்கை அங்கிகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அவனும் பரிசுத்த ஆவியின் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் புறஜாதிகள் மனமாற்றம் அடையமுடியும் என்பதை வெளிப்படையாக அறிக்கையிட்டவன் இவன். அவர்கள் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தபோது மனிதனுடைய செயல்கள் இன்றி பரிசுத்த ஆவியின் வல்லமையை, பிரசன்னத்தை இலவசமாக பெற்றுக்கொண்டார்கள். இந்த அறிக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. உன்னதமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. வசனத்தைக் கேட்டவர்கள் கிருபையின் ஆவிக்கு தங்கள் இருதயங்களை திறந்து கொடுத்தார்கள். அது புதிய உடன்படிக்கையிலிருந்து இலவசமாக வெளிப்பட்டது.
இரண்டு பிரசங்கிகளும் லீஸ்திராவை அடைந்தபோது தீமோத்தேயு என்ற ஒரு வாலிபனை சந்தித்தார்கள். பவுலின் முந்தைய பயணத்தில் அந்தப் பட்டணத்தில் கல்லெறியப்பட்ட போது, விசுவாசியாக மாறியவன் இந்த தீமோத்தேயு, இந்த வாலிபனுக்கு கிரேக்க தகப்பனும், யூத தாயும் இருந்தார்கள். இவனது இரக்கம், அன்பு மற்றும் ஞானத்தின் நிமித்தம் பேர்பெற்றவனாக இருந்தான். அப்போஸ்தலர்களின் அங்கிகாரம் எதுவும் இன்றி, அவன் சபைகளை திடப்படுத்தினான், உற்சாகப்படுத்தினான், ஐக்கியப்படுத்தினான் மற்றும் பக்திவிருத்தியடையச் செய்தான். மேலும் அவன் இக்கோனியாவிற்கு பயணம் சென்று, அங்கேயிருந்த சகோதரர்களை சந்தித்தான். இதனால், அவன் எல்லாக் கிறிஸ்தவர்களாலும் அறியப்பட்டிருந்தான். கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரனாக அங்கிகரிக்கப்பட்டிருந்தான்.
பரிசுத்த ஆவியின் நடத்துதலினால் பவுல், இந்த வாலிபனும் தனக்கு உதவியாக இருக்க முடியும் என்று உணர்ந்தான். தனது நீண்ட ஆபத்தான பயணங்களில் தீமோத்தேயுவை உடன் ஊழியக்காரன் என்று பவுல் அழைத்தான். மேலும் பாடுபடுகிற அப்போஸ்தலனுடன் இணைந்து பணிசெய்த உண்மையுள்ள ஊழியனாக இருந்தான். கர்த்தருக்குள் இவனை பவுல் தன்னுடைய உண்மையுள்ள குமாரன் என்று அழைத்தான் பிலிப்பி, கொரிந்து மற்றும் பல இடங்களில் இருந்த புதிய சபைகளின் ஆத்துமாக்களை பக்திவிருத்தியடையச் செய்தான். அப்போஸ்தலர் நீண்ட காலம் தங்க முடியாத இடங்களில் தீமோத்தேயு பவுலின் பணியை நிறைவேற்றி முடித்தார். (பிலிப்பியர் 2:20; 1கொரிந்தியர் 4:17). பவுலின் மரணத்திற்குப்பின்பு எபேசுவில் இருந்த சபையில் அப்போஸ்தலரின் வாரிசாக தீமோத்தேயு காணப்பட்டான். நிரூபங்களில் அவனுக்கு எழுதப்பட்ட காரியங்களை, அங்கே சபைகளில் நடைமுறைப்படுத்தினான். இன்றைய வரைக்கும் சபைகளின் பக்திவிருத்திக்கான அடிப்படை வழிகாட்டியாக இந்த நிரூபங்கள் உள்ளன.
பவுலுடன் இணைந்து பயணம் செய்ய, இந்த வாலிபனை அழைத்ததின் விளைவாக தலைமைக்கு பிரச்சனை ஏற்பட்டது. அவனுடைய தாய் யூதப் பெண், அவனுடைய தகப்பன் கிரேக்கன். அக்காலத்தில் யூத நியாயப்பிரமாணத்தின் படி சட்ட விரோதமாக இப்படிப்பட்ட திருமணம் கருதப்பட்டது. பிறருக்கு இடறுதல் இல்லாமல் இருக்க பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணினான். அவன் நீதிமானாக்கப்படுவதற்காகவோ அல்லது பரிசுத்தமாக்கப்படுவதற்கோ இப்படிச் செய்யவில்லை. யூதர்கள் அவனை விமர்சிப்பதன் மூலம் பிறருக்கு தடையாக இராதபடி பவுல் இப்படிச் செய்தான். இவ்விதமாக இந்த வாலிபன் யூத மார்க்கத்தை தழுவினான். அவனது தாயின் குடியுரிமை அவனுக்கு அருளப்பட்டது. யூதர்களுடன், அவர்களுடைய சமூக வாழ்வில் பங்கெடுக்கக் கூடியவனாக அவன் மாறினான். அதே சமயத்தில் அவன் கிரேக்கர்களுக்கு கிரேக்கனாக தன்னுடைய பிரசங்கத்தின் மூலம் ஊழியம் செய்தான். மீண்டும் நியாயப்பிரமாணத்திற்கு உட்படும்படி பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணவில்லை. மாறாக அன்பின் வழியை வெளிப்படுத்திக் காண்பிக்கவே அப்படிச் செய்தான். அவன் புறஜாதிகளை ஆதாயப்படுத்தும்படி தன்னுடைய சீஷனை விருத்தசேதனம் பண்ணவில்லை. ஆனால் யூதர்கள் நிமித்தம் செய்தான். பிரசங்கம் என்பது ஒரு திடமான வடிவத்திற்குள் உள்ளடக்கப்பட்டது அல்ல. மாறாக தியாக அன்பிற்கான சுதந்திரத்தை தருகின்ற ஒன்றாக உள்ளது. முழு இருதயத்துடன், ஆத்துமாவுடன் பணி செய்ய அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அன்பாக இருக்கின்றது.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் தீமோத்தேயுவிற்கு இரண்டாம் பிறப்பை கொடுத்ததற்கு நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். அவனை ஆவிக்குரிய குமாரனாக உருவாக்கினீர். உம்முடைய பரிசுத்த ஆவியின் வரங்களினால் அவனை நிரப்பினீர். நீர் உமது சபைகளை பக்திவிருத்தியடையச் செய்ய அவனை பக்குவப்படுத்தினீர். கடினமான மிஷெனரி பயணத்தில் பணி செய்ய அவனை தயார்படுத்தினீர். உம்மைப்பின்பற்ற எங்களுக்கு உதவும். உமது சபையை வளரச்செய்வதில் நாங்கள் உண்மையுடன் பங்கெடுக்க உதவும். உமது நாமத்தில் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய உதவும்.
கேள்வி:
- தீமோத்தேயுவிற்கு செய்யப்பட்ட விருத்தசேதனம் அவசியமானதா? இல்லையா? ஏன்?