Previous Lesson -- Next Lesson
1. பவுல் பர்னபாவை விட்டுபிரிதல் (அப்போஸ்தலர் 15:36-41)
அப்போஸ்தலர் 15:36-41
36 சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். 37 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். 38 பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.39 இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்.40 பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, 41 சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
எங்கே இறைவனுடைய அழைப்பு இருக்கிறதோ, அங்கே அவருடைய அப்போஸ்தலர்களால் அவருடைய வல்லமை உணரப்படுகிறது. ஆண்டவரால் ஒரு ஊழியர் அழைக்கப்படாத இடத்தில். அவரது பணி செத்துப்போனதாகவும், அவரது செயல்கள் உயிரற்றதாகவும், வல்லமையின்மையோடும், அழிவோடும் காணப்படும். அந்தியோகியாவில் செழித்தோங்கும் சபையில் தொடர்ந்து சமாதானமாய் பவுல் படுத்துறங்கவில்லை. அவருடைய பிரசங்கத்தின் மூலம் பரிசுத்த ஆவியினால் இரண்டாம் பிறப்பை அடைந்த அனடோலியாவின் ஆவிக்குரிய பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை காண விரும்பினார். அவர்கள் சுமூகமற்ற உறவுகளின் சூழ்நிலையில் ஆவிக்குரிய குழந்தைத் தன்மையுடன் வாழ்ந்துவந்தார்கள். எனவே பவுல் “பரலோகத்தின் பாலைவனைச்சோலையை” பூமியின் பாலைவனங்களுக்கு கொண்டு செல்லும்படி சிரியா மற்றும் சின்ன ஆசியாவில் இருந்து பல்வேறு சபைகளின் சகோதரர்களை அழைத்தார்.
“நான் தனியாக செல்கிறேன்” என்று பவுல் கூறவில்லை. “நாம் இணைந்து செல்வோம்” என்றான். பரிசுத்த ஆவியானவர் தன்னை தெரிந்தெடுத்திருப்பதையும், பர்னபாவை உடன் ஊழியத்தில் வைத்திருப்பதையும், இந்த இணைப்பு ஊழியத்தின் மூலம் வெளிப்பட்ட அசாதாரமான வல்லமை, அதிகாரம் மற்றும் கனியையும் பவுல் அறிந்திருந்தான். இந்தக் குழுவில் உள்ளவர்களில் வயது முதிர்ந்தவர் பர்னபா ஆவார். பாடுகள் நிறைந்த இரண்டாம் மிஷெனரி பயணத்திற்காக பவுலுடன் இணைந்து செல்ல பர்னபா மீண்டும் ஒரு முறை ஆயத்தமானார். அந்த நீண்ட பயணத்தில் அநேக ஆபத்துகள், போராட்டங்கள் மற்றும் உபத்திரவங்கள் இருக்கும். இந்த ஆபத்து நிறைந்த மிஷெனரி ஊழியத்திற்காக அப்போஸ்தலர்களை அனுப்புவது குறித்து பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு எதுவும் அங்கே இல்லாதிருந்தது. இது பவுல் மூலம் கூறப்பட்ட ஒரு ஆலோசனையாக இருந்தது. அவரது இருதயம் அந்த சபைகளின் சகோதரர்களை மீண்டும் ஒருமுறை காண வாஞ்சித்தது.
ஒரு சபையும் ஸ்தாபிக்கப்படாதிருந்த தனது தாய் நாடான சீப்புரு தீவிற்க்கு முதலாவது செல்ல பர்னபா ஒருவேளை விரும்பியிருக்கலாம். ஆனால் பவுல் இரும்பு குளிராக இருக்கும் போது அதை அடிக்க விரும்பவில்லை. மாறாக அவர் விளைந்துள்ள நிலங்களுக்கு நேரடியாக செல்ல விரும்பினான். இந்த வேதனைமிக்க நிகழ்வு கலாத்தியர் 2:18ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பர்னபாவும் பேதுருவும் தங்கள் எண்ணங்களில் மாறுபட்டு நிற்பதற்கு சில நாட்கள் முன்பு நிகழ்ந்திருக்க வேண்டும். யூதக் கிறிஸ்தவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக புறஜாதிகளுடன் இணைந்து சாப்பிடுவது தவிர்க்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு குழுக்களுக்கு இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. அப்போஸ்தலர்கள் நியாயப்பிரமாணத்தின் மீதான அன்பின் நிமித்தம் நற்செய்தி தரும் விடுதலையை குறைத்து மதிப்பிட்டார்கள். எருசலேமில் இருந்த பக்தி வைராக்கியம் மிகுந்த நியாயப்பிரமாணவாதிகளின் வார்த்தைகளுக்கு பயந்திருந்தார்கள்.
இறுதியாக மீண்டும் ஒருமுறை தனது உறவினன் யோவான் மாற்குவை உடன் அழைத்துச் செல்ல பர்னபா விரும்பினான். இந்த இரண்டாம் மிஷெனரி பயணத்தில் அவனை பயிற்றுவிக்க எண்ணினான். பவுல் எதிர்த்து நின்றார். அனுபவமிக்க இரண்டு சகோதரர்களுக்கிடையே சந்தோஷமற்ற வாக்குவாத நிலை ஏற்பட்டது. புறஜாதிகளுக்கான அப்போஸ்தலன் வாலிபனாகிய மாற்குவில் பணஆசை, பலவீனமான மனிதனைக் கண்டான். அவன் ஊழியத்திற்கு ஆபத்தாகவும், ஆசீர்வாதத்திற்கு தடையாகவும் இருப்பான் என்று எண்ணினான். பவுல் இந்த ஆலோசனையை எதிர்த்தான். தகப்பனைப் போல இருந்த மத்தியஸ்தன் பர்னபாவின் வார்த்தைகளை பவுல் கவனிக்கவும் இல்லை. பர்னபாவிற்கு வேறு வழி இல்லாதிருந்தது. எனவே தனது உறவினனை அழைத்துக் கொண்டு சீப்புருதீவிற்கு கப்பற்பிரயாணம் செய்தான். இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை பர்னபா, இறைவனுடைய ராஜ்யத்தையும், திருச்சபையையும் இணைக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஊழியக்காரனாக, ஆசீர்வதிக்கப்பட்ட இணைப்புப் பாலமாக தன்னை நிரூபித்தான். அப்போஸ்தலர்கள் பயந்துகொண்டிருந்த போது, சில ஆண்டுகள் முன்பு புதிய விசுவாசியான சவுலை பர்னபா கொண்டு வந்தான். ஆண்டவர் மாற்குவுடன் பர்னபா இணைந்ததை ஆசீர்வதித்தார். எனவே மாற்கு முக்கியமான நற்செய்தியாளராக மாறினான். இந்த நிகழ்ச்சிக்குப்பின்பு, நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் மாற்குவைக் குறித்து அதிகம் வாசிக்கிறதில்லை. ஆனால் பவுல் தனது கடிதங்களில் பின்பு எழுதுகிறார். உண்மையுள்ள மாற்குவை அவன் தன் குழுவில் ஏற்றுக்கொண்டான். ஒருவேளை பர்னபாவின் மரணத்திற்குப் பின்பு இது நிகழ்ந்திருக்கலாம். எனவே மாற்கு பவுலின் கூட்டாளியானான். பின்பு பேதுருவுடனும் பணி செய்தான். அவன் தான் வல்லமைமிக்க மூன்றாவது நற்செய்தியை எழுதினான். அது அவனுடைய பெயரை சுமந்து கொண்டிருக்கிறது.
இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக இரண்டு மிஷெனரி குழுக்கள் எழும்பின. அவர்கள் இருவருமே சரியானவர்கள். அவர்கள் மூலமாக மிகப்பெரிய மன்னிப்பும், ஆசீர்வாதமும், இறைவனின் அன்போடு வெளிப்படுத்தப்பட்டது. பவுல் எருசலேமில் இருந்த யூத விசுவாசி சீலாவை தன் உடன் பணியாளாக தெரிந்துகொண்டான். அப்போஸ்தல ஆலோசனைக் குழு முன்பாகவே பவுலின் சரியான ஆலோசனையை அந்தியோகியாவிற்கு கொண்டுசெல்லும்படி நியமித்திருந்தது. நியாயப்பிரமாணத்தை பொறுத்த வரை சில காரியங்களில் புறஜாதி விசுவாசிகளுக்கு உறுதிப்படுத்த அவன் சென்றான். சீலா ரோமக் குடியுரிமையை பெற்றிருந்தான். மத்தியத்தரைக்கடல் பகுதிகளில் அவன் பயணம் செய்த போது, இது அவனுக்கு வெகுவாய் உதவியது. தெசலோனிக்கேயருக்கு கடிதம் எழுதப்பட்ட போது, இவனும் ஒரு உடன் வேலையாளாக இருந்தான். பவுலுடன் இணைந்து கற்றுக்கொண்டான். சிறைச்சாலையில் பாடுகள் பட்டான். பவுல் சிறைச்சாலையில் இருந்தபோது, சீலா பேதுருவுடன் இணைந்து, தனிமைப்பட்டுப் போன சபைகளை சந்திக்கும்படி சென்றான். (1 பேதுரு 5:12) அங்கே மாற்குவும் அவனுடன் இணைந்து கொண்டான் என்று நாம் வாசிக்கிறோம். உலகத்தில் திருச்சபையை வழிநடத்துவதிலும், முன்னேற்றுவதிலும் இந்த இரகசியமான இயக்கத்தில் எவ்விதம் பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டார் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.
பர்னபாவிற்கும், பவுலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக அந்தியோகியா சகோதரர்கள் அதிகம் பாடுபட்டார்கள். அவர்கள் தொடர்ந்து விண்ணப்பம் செய்தார்கள். பவுலின் காணப்பட்ட சரியான நிலையை உணர்ந்தார்கள். மேலும் பர்னபாவின் தகப்பனுக்குரிய அன்பை அறிந்து கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் மன்னிப்பு, வல்லமை, பணிசெய்ய போதுமான பெலன் ஆகியவற்றை உயிருள்ள கிறிஸ்துவிடம் கேட்டார்கள். ஆண்டவரின் ஆசீர்வாதம் இரண்டு குழுக்களிலும் வெளிப்படையாகக் காணப்பட்டது. இவ்விதமாக பயணம் செய்ய புறப்பட்டவர்கள் மீது தலைவர்கள் கைகளை வைத்தார்கள் என்று நாம் வாசிக்கிறதில்லை. அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள். தங்களது பயணங்களை நிறைவேற்றி முடிக்க இறைவனின் வல்லமை மீது நம்பிக்கை வைத்தார்கள்.
பவுல் தனது மிக நீண்ட இரண்டாவது மிஷெனரி பயணத்தை ஆரம்பித்த போது, அவர் நோக்கம் மற்றும் முடிவு குறித்து அறிந்திருந்தார். ஆனால் அதற்காக திட்டம் பண்ணவில்லை. ஆனால் முந்தைய ஊழியத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அநேக சபைகள் சிரியாவின் வடபகுதி மற்றும் தர்சுவை சுற்றியிருந்த பகுதிகளில் இருந்தன. அந்த சபைகளை சந்திக்கும்படியான ஓர் வாஞ்சை அவனுக்குள் இருந்தது. இந்த சபைகளின் மையங்களைக் குறித்து நமக்குத் தெரியவில்லை. ஆழமான ஆவிக்குரிய இருளின் மத்தியில் அந்தியோகியா மற்றும் சின்ன ஆசியா இடைப்பட்ட பட்டணங்களில் தமது நற்செய்தியாகிய விளக்குத் தண்டுகளை ஆண்டவர் ஸ்தாபித்ததற்காக நாம் மகிழ்ச்சியடைவோம்.
விண்ணப்பம்: ஆண்டவரே, சண்டை போடுகிற சகோதரர்களின் தவறுகளை நீர் மன்னிப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். அவர்களை புதிய பணிக்காக நீர் பரிசுத்தப்படுத்துகிறீர். பிரசங்கிக்கக் கூடிய உறுதியினால் எங்களை நிரப்பும். முடிவு வரை எங்களை பலப்படுத்தும். நாங்கள் சபையில் சும்மாயிராதபடி எங்களை காத்துக்கொள்ளும். உலகிற்கு உம்முடைய இரட்சிப்பின் நற்செய்தியை கொண்டு செல்ல உதவும்.
கேள்வி:
- பவுலின் இரண்டாவது மிஷெனரி பயணத்திற்கான காரணம் மற்றும் அடிப்படையான திட்டம் என்ன?