Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 050 (The Wonderful Works of Christ at the Hand of Peter)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

8. பேதுருவின் கரத்தினால் செய்யப்பட்ட கிறிஸ்துவின் அற்புத செயல்கள் (அப்போஸ்தலர் 9:31-43)


அப்போஸ்தலர் 9:31-35
31 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. 32 பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். 33 அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான். 34 பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். 35 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

இயேசு நடந்து திரிந்த இடமாகிய பலஸ்தீனாவில் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவங்கள் இருந்தபோதிலும் திருச்சபை வளர்ச்சியடைந்தது, ஆகவே 31-ம் வசனம் லூக்காவிற்கு முக்கியமானது. கலிலேயாவின் மலைப்பகுதிகளிலும் திருச்சபைகள் நிறுவப்பட்டன, ஆனால் அதை நிறுவியவர்கள் யார் என்பது தெரியவில்லை.

சவுல் இரட்சகராகிய இயேசுவிடம் திரும்பியபோது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான உபவத்திரவங்கள் குறையத் தொடங்கியது. ஸ்தேவான் கொலைசெய்யப்பட்ட பிறகு, மக்கள் நடுவில் பயம் ஏற்பட்டிருக்கும் என்றும் யூத அதிகாரிகள் நினைத்தார்கள். மூன்று வருடங்கள் பவுல் எருசலேமிற்கு வெளியில் இருந்தபோது உபத்திரவங்கள் சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறுப்பு எரிமலைக்குக் கீழிருக்கும் நெருப்பைப் போல காத்துக்கொண்டிருந்தது. ஆனால் அது வெளிப்படையாக பற்றி எரியவோ, சீடர்களைத் தாக்கவோ இல்லை.

தமஸ்குவிற்கும் கலிலேயாவிற்கும் இடையிலுள்ள கடற்கரை ஓரங்களில் இருந்த திருச்சபைகள் சிறிது காலம் உபத்திரவங்களின்றி ஆறுதலடைந்திருந்தன. அவர்கள் அன்பிலும், வேதாகமத்தைப் படிப்பதிலும், பொறுமையிலும், தியாகத்திலும், ஐக்கியத்திலும், பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர்கள் பக்திவிருத்தியடைந்தார்கள். ஞானத்தின் ஆரம்பமாகிய கர்த்தருக்குப் பயப்படும் பயம் அவர்களில் நிலைத்திருந்தது. பரிசுத்த திரித்துவத்தில் கிறிஸ்தவர்களுக்கிருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பரிசுத்தருக்கு முன்பாக அவர்கள் செலுத்த வேண்டிய கனத்தோடு தொடர்புடையதாயிருந்தது. துதியோடும் நன்றியறிதலோடும் நாம் இறைவனைப் பிதா என்று அழைக்கும்போது, “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற கர்த்தருடைய விண்ணப்பத்தின தொடக்கத்தை நாம் மறந்துவிடக்கூடாது.

அன்பில் இறைவனுக்குள்ளாக வாழும் திருச்சபைகள் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்திருக்கும்போது அத்திருச்சபைகளில் நற்செய்திப்பணி தானாக நடைபெறும். அத்திருச்சபைகளில் இருக்கும் ஒவ்வொரு விசுவாசிகளும் இருளில் பிரகாசிக்கும் வெளிச்சங்களாயிருப்பதால், இந்த எழுப்புதலுக்கு சிறப்புக் கூட்டங்கள் நடத்தவேண்டிய தேவையிருக்கவில்லை. கர்த்தரில் உறுதியாயிருக்கிற ஒவ்வொருவரும் காரிருளில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போல இரட்சிப்பின் வழியைக் காண்பிக்கிறவர்களாயிருக்கிறார்கள். மாற்றமடைந்த வாழ்க்கையின் சாட்சியும் வார்த்தையின் வல்லமையும் பரிசுத்த ஆவியானவரினால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குப் பயந்து நடுங்கும் இருதயங்கள் தொடப்படுகின்றன. மனந்திரும்புதல் விசுவாசத்தின் நீதியினால் முடிசூட்டப்படுகிறது. இரட்சிப்பின் நற்செய்தி சிலுவையில் அறையப்பட்டவரிடம் மக்களை நடத்துகிறது. புதிய விசுவாசி அப்போது பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுகிறார். அவரே நம்முடைய பிரசங்கங்களைத் தூண்டும் நபராகிறார். மறுபிறப்படைந்த விசுவாசிகள் மூலமாக தனிப்பட்ட நபர்களிடத்தில் அவர் பேசுகிறார். அவருடைய வல்லமையினால் திருச்சபைகள் செயல்படத் தொடங்குகின்றன. அன்புள்ள சகோதரர்களே உங்கள் திருச்சபைகள் எப்படியிருக்கின்றன? நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறீர்களா? அவர் உங்கள் வாழ்வின் மையமாயிருக்கிறாரா? உங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வீக தேற்றரவாளன் உங்களுடைய சாட்சிபகரும் பணியை பெலப்படுத்துகிறாரா?

உபத்திரவங்கள் இல்லாத காரணத்தினால் திருச்சபை அமைதியையும் விடுதலையையும் அனுபவித்தன. கிறிஸ்தவத்தின் மையமாயிருந்த எருசலேமைவிட்டு பேதுரு வெளியேறிச் செல்கிறார். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சபைகள் அனைத்தையும் அவர் சந்தித்தார். அவர் கடற்கரைப் பட்டணங்களைச் சந்தித்து இறுதியில் யோப்பா (இன்று யாப்பா என்று அழைக்கப்படுகிறது) பட்டணத்திற்கு வந்து சேர்ந்தார்.

கர்த்தர் உலகத்திலிருந்து பிரித்தெடுத்து, அழைத்து, தமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் லித்தா பட்டணத்தில் திருச்சபையாகக் கூடிவந்திருந்தது. கிறிஸ்துவின் இரத்தத்தினால் அவர்கள் சுத்திகரிக்கப்பட்டு, இரக்கத்தின் ஆவியினால் அவர்கள் நிரப்பப்பட்டிருந்தார்கள். கிறிஸ்துவில் அவர்கள் வைத்த விசுவாசத்தினால் அவர்கள் கிறிஸ்தவர்களாகியிருந்தார்கள். அவர்கள் மீட்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, அவரால் காக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த ஆசீர்வாதங்களுக்கு நடுவிலும் அவர்களுக்குப் பிரச்சனைகளும், பாவச் சோதனைகளும், நோய்களும் காணப்பட்டது. விசுவாசிகளில் ஒருவர் எட்டு வருடங்களாக முடக்குவாதத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். பேதுரு அதைக் கேள்விப்பட்டு அவருடைய வீட்டைத் தேடத் தொடங்கினார். ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாக அவர் அவருடைய வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து, கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் பேசினார். அவர்கள் ஒன்றாக விண்ணப்பித்து தங்கள் பாவங்களை அறிக்கை செய்தபோது பரிசுத்த ஆவியின் வல்லமை அவர்கள் மேல் இருந்தது. அந்த முடக்குவாதக்காரனைப் பார்த்து பேதுரு அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று உறுதியளித்தார்: “சகோதரனே கிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார்” என்று அவரிடம் சொன்னார். இந்த ஒரு வாக்கியத்தின் மூலமாக நற்செய்தியைச் சுருக்கிக் கூறிய பேதுரு, நசரேயனாகிய இயேசுவே உண்மையான கிறிஸ்து என்று அனைத்து மக்கள் நடுவிலும் அறிக்கை செய்தார். வானத்திலும் பூமியிலும் அவருக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டள்ளது. அவரிடத்திலிருந்து இரட்சிப்பின் வல்லமை ஒரு விசுவாசியிடமிருந்து இன்னொரு விசுவாசிக்குப் புறப்பட்டுச் செல்கிறது. அதை இயேசு இவ்வாறு சொன்னார்: “வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும்” (யோவான் 7:38).

முடக்குவாதத்தில் இருந்த ஐனேயா என்ற அந்த மனிதன் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்தார். நம்பிக்கையோடு அப்போஸ்தலரோடு கீழ்ப்படிந்து, கண்ணீரினால் நனைந்த பாயை சுருட்டிக்கொண்டு நடந்தான். விண்ணப்ப ஐக்கியத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது அவர்கள் அனைவரும் தங்கள் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். கடற்கரைப் பகுதிகளில் இருந்த விசுவாசிகள் அனைவரும் இந்த பொறுமையும் விசுவாசமுமுள்ள நபரை அறிந்து அவருக்காக மகிழ்ச்சியடைந்தார்கள். பேதுரு அங்கு ஒரு அற்புதத்தைச் செய்தார் என்று அவர்கள் சொல்லவில்லை. கிறிஸ்து தம்முடைய திருச்சபையைக் குணமாக்க இடைப்பட்டார் என்று அவர்கள் கூறினார்கள். பல அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உயிருள்ள கர்த்தர் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே உம்முடைய திருச்சபையின் வளர்ச்சிக்காக உமக்கு நன்றி. உம்முடைய ஊழியர்கள் செயல்படும் உம்முடைய வல்லமைக்காக உமக்க நன்றி. எங்கள் விசுவாசம் பெலவீனமாக இருப்பதால், எங்களை பெலப்படுத்தும் என்று நாங்கள் விண்ணப்பிக்கிறோம். எங்கள் அக்கிரமங்களை எல்லாம் எங்களுக்கு மன்னித்தருளும். எங்கள் அனலுமற்ற குளிருமற்ற நிலையை மன்னித்து, உம்முடைய வழிகளில் முன்னேறிச் செல்ல எங்களுக்கு உதவிசெய்யும்.

கேள்வி:

  1. லித்தாவில் இருந்த ஐனேயாவை கிறிஸ்து எவ்வாறு குணப்படுத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:36 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)