Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 041 (Stephen becoming the First Martyr)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)

உ) திறக்கப்பட்ட பரலோகத்தை ஸ்தேவான் காணுதல் மற்றும் அவன் கல்லெறியப்படுதல்; முதல் இரத்தசாட்சியாக மாறுதல் (அப்போஸ்தலர் 7:54 - 8:1)


அப்போஸ்தலர் 7:54 - 8:1
54 இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.55 அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.57 அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, 58 அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். 59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். 60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். 8:1 அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான்.

ஆலோசனைச் சங்கத்து மதத் தலைவர்கள் இறைவனின் சத்தத்தை கேட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களை ஊடுறுவக்குத்தினார். மேலும் அவர்கள் மனந்திரும்புவதற்கான ஒவ்வொரு தருணத்திலும் எதிர்த்து நின்றார்கள். இறைவனுக்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள். நரகத்தின் ஆவியினால் நிறைந்த, தங்களுடைய பற்களை கடித்தார்கள். ஸ்தேவானின் வாயில் இருந்து தூஷணத்தின் தெளிவான வார்த்தை கேட்கும் வரை அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். இறுதிவரை அவன் நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டுள்ள சத்தியங்களைக் குறித்து மிகுந்த ஞானத்துடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் புதிய ஒளியின் வெளிச்சத்தில் பழைய விசுவாசத்தை வெளிப்படுத்திக் காண்பித்தான். அவர்களால் எந்தவொரு சட்டபூர்வமான ஆதாரத்தையும் அவனுக்கு எதிராக கொண்டு வர முடியவில்லை. அவர்களால் அவனை அழிக்க முடியவில்லை.

இந்த தருணத்தில் ஆண்டவருடைய திட்டம் அவருடைய குமாரனை தனித்துவமான விதத்தில் மகிமைப்படுத்துவதாக இருந்தது. பரிசுத்தமான, குற்றம் செய்யாத ஸ்தேவான் வெற்றியினால் முடிசூட்டப்பட்டான். பெரும் பசியுள்ள ஓநாய்கள் மத்தியில் தாழ்மையுள்ள ஆட்டைப்போல நின்று கொண்டிருந்தான். அவைகள் அவன் மீது பாய்வதற்கும் அவனை அழிப்பதற்கும் ஆயத்தமாய் இருந்தன. ஸ்தேவானின் முகம் தேவ தூதனின் முகத்தைப் போல காணப்பட்டது. திறக்கப்பட்ட வானத்தின் மீது அவனது கண்கள் பதிந்திருந்தது. இறைவனின் எதிரிகளிடம் இருந்து எந்தவொரு வார்த்தையையும் அவனது செவிகள் கேட்கவில்லை. அவன் தனிப்பட்ட விதத்தில் மகிமையில் இறைவனைக் கண்டபோது மக்களையும், சுற்றியிருந்த ஆலோசனைச் சங்கத்தையும் மறந்துவிட்டான். தீர்க்கதரிசிகள் இறைவனை அவருடைய மகிமையில் அடிக்கடி காண்பதில்லை. அப்படி அவர்கள் காணும்போது தாழ விழுந்து விடுவார்கள். எப்படி இருப்பினும் ஸ்தேவான் அற்புதமான சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியினால் நிறைந்தவனாக நின்று கொண்டிருந்தான்.

அங்கே ஒரு காட்சியை இவன் கண்டான். தன்னுடைய முதலாவது இரத்த சாட்சியை வரவேற்கும்படி இறைவனின் குமாரன் அவருடைய பிதாவின் வலது பாரிசத்தில் சிங்காசனத்திற்கருகில் நின்று கொண்டிருந்தார். பொதுவாக இறைவனின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பவராக இயேசுவை வேதம் காண்பிக்கிறது. இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் இயேசுவானவர் தமது சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்று கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். மேலும் ஸ்தேவான் பூமியில் அவனுடைய வாழ்நாட் காலத்தில் கிறிஸ்துவைக் கண்டதில்லை. அவன் முதல் பார்வையிலேயே மனுஷகுமாரனை அறிந்து கொண்டான். இயேசுவானவர் மெய்யான மனிதனாக இறைவனின் ஒளியின் மகிமையில், தூதர்களால் சூழப்பட்டு, மகிமையுடன், ஒளிவீசும் கதிர்களின் மத்தியில் இருந்தார்.

கிறிஸ்துவின் சாட்சியானவன் தனக்கு இறைவன் காண்பித்ததை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் சாட்சியாக அறிவித்தான். அவன் பரிசுத்த ஆவியானவரின் பட்டயக் கூர்மையுடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினான். சகல மகிமைக்கும் பாத்திரரைக் கண்டு ஆலோசனைச் சங்கத்து முன்பாக அவன் கூறினான். “இதுமுதற் கொண்டு நீங்கள் மனுஷகுமாரன் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பீர்கள்”. இறைவனை தங்கள் வாழ்வில் கொண்டிராத அதிகாரிகள் அவரைப் பார்க்கவில்லை. ஆனால் அவர்களால் துன்புறுத்தப்பட்ட, பரியாசம்பண்ணப்பட்ட ஸ்தேவான் பரலோகம் திறந்திருப்பதைக் கண்டான்.

பரிசுத்த திரித்துவத்தில் தொடர்ந்து வெளிப்பட்ட கிறிஸ்துவின் மகிமையின் வெளிப்பாட்டை யூதர்கள் தூஷணத்தின் உச்சகட்டமாக கருதினார்கள். அவர்கள் இப்படிப்பட்ட தூஷணத்தை கேட்பதை நியாயப்பிரமாணம் தடைசெய்கிறது என்று புரிந்திருந்தார்கள். இப்படிப்பட்ட தீய சிந்தனை அவர்களது இருதயத்தில் நுழைந்து அவர்களுக்கு இருதயத்தில் சந்தேகம் ஏற்படாதபடிக்கும், கள்ளப்போதனைக்கு அவர்கள் செவிகொடாதபடிக்கும் இப்படி எண்ணினார்கள். ஆகவே அவர்கள் தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். இறைவனின் தனித்துவமான ஒருமையின் மீது எவரேனும் இறை நிந்தனையுடன் கை வைத்தால். அவன் மீது உடனடியாக கல்லெறிய வேண்டும்.

மரியாதைக்குரிய மனிதர்கள் உரத்த சத்தமிட்டார்கள். ஆசாரியர்கள் கூக்குரல் இட்டார்கள். இரையின் மீது மிருகங்கள் பாய்வதைப் போல ஸ்தேவான் மீது அவர்கள் பாய்ந்தார்கள். அவனை அந்த அறையிலிருந்து இழுத்துக்கொண்டு பரிசுத்த நகரத்தின் தெருக்களில், சந்துகளில் ஓடினார்கள். இந்த இறை நிந்தனை செய்தவனின் மரணத்தினால் சமாதானத்தின் நகரம் தீட்டுப்படாதபடி அவனை நகரத்தின் அலங்கச் சுவருக்கு வெளியே எறிந்து விட்டார்கள்.

கூக்குரல் மற்றும் பெரும் சத்தத்திற்கு மத்தியில் ஸ்தேவான் பாதுகாப்பை உணர்ந்தான். அவனது மரணத்திற்கான ஆயத்தத்தில் அவன் விண்ணப்பம் செய்தான். அவனது ஆத்துமா பரலோகிற்கு ஏறிச்செல்ல ஆயத்தமாயிருந்தது. அங்கே அவனுடைய ஆண்டவரும் இரட்கருமானவர் அவனை வரவேற்க ஆயத்தமாயிருந்தார். இறுதிவரை பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிவதில் அவன் நிலைத்திருந்தான். அவனுடைய எதிரிகள் மீதான அன்பினால் அவனை அவர் நிறைத்திருந்தார். கற்களும், பாறைகளும் அவனது சரீரம் மற்றும் தலையை தாக்கியபோது அவன் கதறினான். தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மனுஷகுமாரனை நோக்கி அவன் கூப்பிட்டான். “ஆண்டவராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்!, இந்த இரத்த சாட்சியானவன் கிறிஸ்துவே ஆண்டவர் என்பதை அறிந்திருந்தான். அவர் நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில் கொடுக்கிறார். அவருடைய கரங்களில் ஜீவன் மற்றும் மரணத்தின் திறவுகோல்கள் இருக்கின்றன. சிலுவையில் அறையப்பட்டவர் தன்னுடைய ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். ஆகவே பரிசுத்த ஆவியானவர் கற்களால் எறியப்பட்டவனை சர்வவல்லமையுள்ளவரின் பெலத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்கும்படி வழிநடத்தினார். அவன் நடுங்கவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. இந்த சமாதானமான மனத்துடன், மகிழ்ச்சியுடன் ஸ்தேவான் விண்ணப்பம் செய்தான். அவனது சரீரம் கொடூரமாக சிதைக்கப்பட்டது, நொறுக்கப்பட்டது, மழை போல் பொழிந்த கற்களால் சூழப்பட்டது. இறுதியில் அவன் கீழே விழுந்தான். பின்பு முழங்காற்படியிட்டு, உரத்த சத்தமிட்டு கூறினான். “ஆண்டவரே ! இந்த பாவத்தை இவர்கள் மீது சுமத்தாதிரும்!” இறைவன் அவனுக்கு மன்னித்தது போல, ஸ்தேவானும் தன்னுடைய நாட்டு அதிகாரிகளை அன்புடனும், உடனடியாகவும் மற்றும் எவ்வித நிபந்தனையுமின்றி மன்னித்தான். அவனது இருதயத்தில் இறைவனுடைய அன்பு ஊற்றப்பட்டிருந்தது. இந்த ஆவியானவர் அவனது மரணத்தில் அவனைக் காத்துக்கொண்டார். கற்கள் அவன் மீது பலமாக வீசப்பட்டு காயங்கள் ஏற்படுத்தினாலும், அவனது மண்டை ஓடு நசுக்கப்பட்டாலும், அவனது எலும்புகள் முறிக்கப்பட்டாலும், அவன் சமாதானமாய் நித்திரையடைந்தான். அவனைக் குறித்த பயத்தினால், அவர்கள் அவனை அழித்தார்கள்.

வைராக்கியமுள்ள மாணவன், உறுதிமிக்க பரிசேயனான வாலிப மனிதன் சவுல், உறங்கிக் கொண்டிருக்கும் இந்த பரிசுத்தவானுக்கு வெகு தூரத்தில் நிற்கவில்லை. அவன் பொய்ச் சாட்சிகளின் வஸ்திரங்களை காவல் காத்துக்கொண்டிருந்தான். நியாயப்பிரமாணத்தின்படி மரணத்திற்கு தீர்ப்பளிக்கப்பட்டவன் மீது சாட்சிக்காரர்கள் முதல் கல்லை எறிய வேண்டும். சவுல் தனது வெறுப்பின் நிமித்தம் இறைநிந்தனை செய்தவனை கொல்லும்படி கற்களை எறிவதில் முழு இருதயத்துடன் பங்குகொள்ளும்படி வெகு வாஞ்சையாயிருந்தான். ஆனால் அவன் வஸ்திரங்களை காவல் காக்க வேண்டியிருந்தது. சவுல் மிகவும் அதிகமாக வெறுத்த இரத்த சாட்சியின் கடைசி வார்த்தைகளை துல்லியமாகக் கேட்டான். ஆனால் அவனுடைய உள்மனமோ இரத்த சாட்சியின் பரலோகத்தில் உள்ள பரிசுத்த திரித்துவத்தை பற்றிய காரியத்தால் நிறைந்திருந்தது. அதே சமயத்தில் பரலோக அருள்மழையின் மத்தியில் ஸ்தேவானின் அன்புள்ள விண்ணப்பம் குறித்த படம் அவனுடைய மனதை விட்டு அகலவில்லை. கீழே வீழ்ந்த ஸ்தேவான் நற்செய்தியின் விளக்கை இவ்விதமாக அவனது எதிரியின் கையில் கொடுத்தான். இவன் தான் பின்பு வேறு எவரையும் விட மிகவும் அதிகமாக பழைய ஏற்பாட்டின் வலிமை மிக்க அஸ்திபாரங்களை தாக்கியவன் ஆவான். இப்படிச் செய்ததின் மூலம் யூத ஆவியிலிருந்து முழு கிறிஸ்தவ சபையையும் அவன் விடுவித்தான். பரிசுத்த ஆவியானவர் இறைவனின் மீட்பின் திட்டத்தின் முன்னேற்றத்தில் எந்தவொரு தவறும், தாமதமும் ஏற்படாதபடி இறைவனின் நித்தியமான அன்புடன் செயல்பட்டார்.

விண்ணப்பம்: பரிசுத்த திரியேக இறைவனே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், உம்மை நேசிக்கிறோம். நீர் ஒருவராய் இருக்கிறீர். நீர் எங்களை நேசிக்கிறீர். நீர் எங்களை புறக்கணிப்பது இல்லை. நீர் உம்முடைய கிருபையின் மகிமையை ஸ்தேவானுக்கு வெளிப்படுத்தியதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். ஸ்தேவான் தனது மரணத்தின் மூலம் இந்த சாட்சியை பெற்றுக்கொண்டான். நீர் திரியேகத்தில் முழுமையான அன்பு மற்றும் சத்தியத்துடன் ஒருவராயிருக்கிறீர் என்று நாங்கள் அறிந்து சாட்சியிடுகிறோம். மரணபரியந்தம் உண்மையாயிருக்க எங்களுக்கு உதவும். உம்முடைய சர்வவல்லமையினால் எங்கள் சாட்சியை தெளிவுப்படுத்தும்.

கேள்வி:

  1. ஸ்தேவானின் கடைசி மூன்று கூற்றுகளை எழுதுக. அவைகளின் கருத்தை நீங்கள் எவ்விதம் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதைக் குறிப்பிடுக.

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)