Previous Lesson -- Next Lesson
18. கமாலியேலின் ஆலோசனையும் அப்போஸ்தலர்கள் அடிக்கப்படுதலும் (அப்போஸ்தலர் 5:34-42)
அப்போஸ்தலர் 5:34-42
34 அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, 35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 36 ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். 37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். 38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; 39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான். 40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
பரிசேயர்கள் தூதர்கள் இருப்பதை நம்பினார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதல் மற்றும் நம்முடைய உலகத்தில் இறைவனைக் காணக்கூடிய காரியங்களை நம்பினார்கள். ஆகவே பூட்டப்பட்ட சிறையிலிருந்து அப்போஸ்தலர்கள் வெளியேறினார்கள் என்பதை அவர்கள் கேட்டபோது, மிகவும் பயந்தார்கள், ஆகவே இயேசுவின் உயிர்த்தெழுதலையும், ஆலோசனைச் சங்கத்தில் அவருடைய தலையீட்டையும் மறுக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.
பரிசேயர்களின் தலைவன், நன்கு கற்றறிந்த மேதை, நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்றவராயிருந்த கமாலியேல் எழுந்து நின்றார். அவர் தான் பவுலின் ஆன்மீக குருவாக பின்பு காணப்பட்டார். இந்த மனிதன் எல்லா மனிதர்களாலும் மதிக்கப்படத்தக்கவராக இருந்தார். கோபத்தினால் கொதிப்படைந்திருந்த ஆலோசனைச் சங்கத்தாரிடம் இவர் மிதமாக பேசினார். அப்போஸ்தலர்கள் மூலமாக இறைவனின் கரம் செயல்படுவதைக் குறித்த நிச்சயம் அற்றவராக கமாலியேல் இருந்தார். இவர்கள் மெய்யாகவே உன்னதமானவரால் அனுப்பப்பட்டவர்கள் என்பதைக் குறித்த நிச்சயம் அவருக்கு இல்லை. இந்த இறையியல் நிபுணர் அவர்களை உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தார். அவர் எந்தவொரு சண்டை சச்சரவையும் அல்லது ஆணவத்தையும் அவர்களிடம் காணவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தைரியம், அன்பு மற்றும் நேர்மையைக் கண்டார். அவர்கள் கள்ளப் போதகர்களைப் போலவோ அல்லது தீய மனிதர்களைப் போலவோ தோற்றமளிக்கவில்லை. அவர் தன்னுடைய ஞானம் மற்றும் விவேகத்தினால், ஆலோசனைச் சங்கத்தில் இருந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மரணதண்டனைக்காக தீர்ப்பு பற்றி பேச அவர் அனுமதிக்கவில்லை. குற்றமற்றவர்களின் இரத்தம் மறுபடியும் சிந்தப்படுவதை அவர் விரும்பவில்லை. இறைவனுடைய சித்தத்திற்கு ஆலோசனைச் சங்கம் எதிர்த்து நிற்காத படி பார்த்துக் கொண்டார்.
கமாலியேல் இயேசுகிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கவில்லை. அப்போஸ்தலர்களின் அழைப்புக்கு கீழ்ப்படியும்படி அவர் முடிவெடுக்கவும் இல்லை. இருப்பினும் நியாயப்பிரமாணத்தின் தாழ்மையுள்ள இந்த போதகரை, மிகவும் இக்கட்டான நேரத்தில் தன்னுடைய அப்போஸ்தலர்களைப் பாதுகாக்க உயிருள்ள ஆண்டவர் பயன்படுத்தினார். தொடர்ந்து தன்னுடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக அப்போஸ்தலர்களை நிறுத்தினார்.
இந்த நியாயப்பிரமாண மேதை தனது வாதத்திற்கு ஆதாரமாக நியாயப்பிரமாணத்தை பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமான காரியம். மாறாக அவர் அனுபவ உண்மைகள் மூலம் அக்கூட்டத்தாரை சரியாக வழிநடத்தினார். அரசியல் தலைவர்களும், கள்ளப்போதனைத் தலைவர்களும் தங்களைப் பின்பற்றுபவர்களை தங்கள் நலத்திற்காக பயனப்டுத்துகிறார்கள். அவர்களில் இருக்கும் வல்லமை இறைவனுடையது அல்ல. அவர்களைப் பின்பற்றுபவர்கள், தலைவர்கள் மரித்தவுடன் விரைவில் அழிந்து விடுவார்கள். இறைவன் மாத்திரமே தன்னுடைய ராஜ்யத்தின் ஆரம்பம், வளர்ச்சி மற்றும் முடிவு வரை இருக்கிறார். மேலும் கிறிஸ்துவே தன்னைப் பின்பற்றுபவர்களில் விசுவாசத்தை துவக்குபவரும், முடிக்கிறவருமாய் இருக்கிறார்.
கமாலியேல் இயேசு என்னும் நபரைக் குறித்து தர்க்க ரீதியாக அறிந்திருந்த குறிப்புகளை இன்று நாம் ஆராய்ந்து பார்ப்போம். கிறிஸ்துவின் இயக்கம் அவருடைய மரணத்திற்கு பின்பு அழிந்து மறைந்து போகவில்லை. மாறாக அது வாழ்கிறது, தீவிரமாக என்றென்றம் விருத்தியடைந்து கொண்டிருக்கிறது. இன்று உலகில் பாதிக்கும் மேல் அது வளர்ந்துள்ளது. இது மனிதர்களால் அல்ல, இறைவனால் வந்தது என்பதை அது காண்பிக்கிறது.
ஆலோசனைச் சங்கத்து எழுபது உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாதிருந்தது. அவர்களில் பெரும்பான்மையானோர், இரக்கமற்ற தன்மையோடு நீதிமானாய் இருக்கிறது. பன்னிரெண்டு பேரையும் கூண்டோடு அழிக்கும் எண்ணத்துடன் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் காத்திருக்கவும், உடனடியாக எந்த தீர்ப்பையும் வழங்காதிருக்கவும் ஒத்துக்கொண்டார்கள். மேலும் ஆலோசனைச் சங்கத்தில் கோபத்துடன் இருந்த உறுப்பினர்களும், பிரதான ஆசாரியனும் தங்கள் பழியை தீர்த்துக்கொள்ள கடுமையான தண்டனை வழங்க முற்பட்டார்கள். தைரியமிக்க குற்றமில்லாத இந்த நீதிமான்களை முதுகில் முப்பத்தொன்பது அடிகள் அடிக்கும் தண்டனையைக் கொடுக்கும்படி ஆலோசனைச் சங்கத்தை வற்புறுத்தினார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட சீஷர்களை காவற்காரர்கள் வெளியே கொண்டு போனார்கள். ஆலோசனைச் சங்கத்தின் அநீதியான முடிவை நிறைவேற்றும்படி, அவர்களுடைய முதுகில் வாரினால் அடிக்கும்படி கொண்டுபோனார்கள். அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாடுபடுவதை சந்தோஷமாய் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் மிகுந்த சந்தோஷமாய் அந்த அடிகளை ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுடைய சொந்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் பாடுபட்டார்கள். ஆண்டவர் அவர்களிடம் இவ்விதமாக கூறியிருந்தார். 11.என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;12.சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:11-12)
இந்த கடுமையான தண்டனை வழங்கியதால் ஏற்பட்ட விளைவு என்னவாக இருந்தது? இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசுவது தொடர்ந்து தடைசெய்யப்பட்டது. இன்று வரைக்கும் அந்த நாமத்தை உச்சரிப்பது யூதர்கள் மத்தியில் விரும்பப்படத்தக்க ஒன்றாக இல்லை. இருப்பினும் அந்த நாமத்தை உச்சரிப்பவர்கள் துன்புறுத்தப்படவோ அல்லது கொல்லப்படவோ இல்லை. திருச்சபையானது இந்த உபத்திரவத்திலிருந்து ஓர் தற்காலிக விடுதலையைப் பெற்றது. தடையிருந்தாலும் அவர்கள் இயேசுவின் நாமத்தைக் குறித்து வெளிப்படையாக பிரசங்கித்தார்கள். அவர்கள் தலைகளின் மேலே ஆபத்து என்னும் கத்தி தொங்கிக்கொண்டே இருந்தது.
கசையடிகள் வாங்கியபின்பு அப்போஸ்தலர்கள் மகிழ்ச்சியுடன், தைரியத்துடன் ஆலயத்து பிரகாரத்திற்கு சென்றார்கள். அங்கே அவர்கள் மரணத்திலிருந்து வெற்றியோடு உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்த சாட்சியை தொடர்ந்து பறைசாற்றினார்கள். அவர்கள் புயங்களிலும், முதுகுகளிலும் வாங்கின அடிகளின் காயங்களை பார்க்க முடிந்தது. இயேசுவை வெறுத்து அவருக்கு செய்ததைப் போலவே, அவர்களுடைய தேசத்து அதிகாரிகள் இவர்களுக்கும் செய்ததை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் உபத்திரவத்தை எதிர்நோக்கியே இருந்தார்கள். இப்படிப்பட்ட ஆபத்து இருந்தாலும் இதன் மூலம் பதரானது கோதுமையை விட்டுப் பிரிக்கப்பட முடிந்தது. விசுவாசிகள் நிலைத்திருக்கவும், உறுதியோடிருக்கவும் செய்தது.
அப்போஸ்தலர்கள் வீடுகள் தோறும் சென்று விசுவாசிகளுக்கு உபதேசம் பண்ணுவதைத் தொடர்ந்தார்கள். அவர்களை வசனங்களிலும், சங்கீதங்கள், தீர்க்கதரிசனங்களிலும் வழிநடத்தினார்கள. இயேசுவின் வார்த்தைகளை அவர் நேரடியாக கேட்டு பெற்றுக்கொண்டிருந்த படியால், அவைகளை விளக்கிச் சொன்னார்கள். அதே சமயத்தில் மேய்ப்பர்களாகிய அவர்கள் காணாமற்போன ஆட்டைத் தேடி, ஆலயத்திலுள்ள திரளான மக்களுக்கு பிரசங்கித்தார்கள். அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசு தரும் முழுமையான இரட்சிப்பைக் குறித்து விளக்கினார்கள். அவர்கள் செய்தியின் உள்ளடக்கம் இரண்டு குறுகிய வாக்கியங்களில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டது. இயேசு மேசியாவாக இருக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்தார். தள்ளப்பட்ட இந்த நசரேயன் தெய்வீக இராஜாவாக இருக்கிறார். அவர் இன்றும் பரலோகில் இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து ஆளுகை செய்கிறார். அப்போஸ்தலர்கள் பயமின்றி, எல்லா மனிதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவே ஒரே நம்பிக்கை என்பதை நிச்சயப்படுத்தினார்கள்.
விண்ணப்பம்: உயிருள்ள ஆண்டவரே, நீர் உமது அன்பின் நிமித்தமாக அடிக்கப்பட்டீர், உமது அப்போஸ்தலர்களும் உம்மைப் போலவே அடிக்கப்பட்டார்கள். என்னுடைய இருதயத்தில் காணப்படும் கோழைத்தனத்திற்காகவும், என்னுடைய இருதயத்தில் காணப்படும் பிரிவினைக்காகவும் என்னை மன்னியும். உம்முடைய அன்பிற்கு நன்றியுள்ளவனாக வாழ எனக்கு கற்றுத்தாரும். விசுவாசிகளுக்கு எல்லா விவேகத்தோடும் கற்றுக்கொடுக்க எங்களை வழிநடத்தும். பேதைகளுக்கு உம்முடைய ஞானம் மற்றம் வல்லமையோடு பிரசங்கிக்க உதவும்.
கேள்வி:
- ஆலோசனைச் சங்கம் அளித்த தீர்ப்பு கிறிஸ்தவ திருச்சபையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் எப்படி முக்கியத்துவம் பெற்றதாய் உள்ளது?