Previous Lesson -- Next Lesson
15. எழுப்புதல் மற்றும் அநேகர் சுகமாகுதல் (அப்போஸ்தலர் 5:12-16)
அப்போஸ்தலர் 5:12-16
12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். 13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். 14 திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 15 பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
பரிசுத்தவான்கள் தங்களது ஐக்கியத்தில் சுயநலமில்லாமல் பிறருக்காகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மாய்மாலத் துதி என்னும் தூபம் போடவில்லை. அவர்கள் முழுவதும் இரக்கத்தினால் நிறைந்து இருந்தார்கள். தங்களது தேசத்தின் பிரச்சினைகளுக்காக அவர்களும் பாடுபட்டார்கள். அவர்கள் பிரசங்கம் பண்ணியது மட்டுமல்லாமல் குணமாக்குதலையும் நிறைவேற்றினார்கள். இறைவனின் கரத்தில் இருந்து உதவியை கேட்டார்கள். அவர்கள் தங்கள் பேச்சினால் மட்டுமல்ல, அவர்களது கைகள் மற்றும் தோள்வலிமையினாலும் இறைவனுக்கு சேவை செய்தார்கள்.
தங்கள் சொந்த சுய வல்லமையை அந்த பரிசுத்தவான்கள் நம்பி போகவில்லை. அவர்கள் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கவில்லை அல்லது ஏழைகளுக்காக பணத்தை சேகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு அருளப்பட்ட இறைவனின் வல்லமையோடு காணப்பட்டார்கள். அதன் விளைவாக அவர்களது சேவை இயேசுவை மகிமைப்படுத்தும் ஓர் வெளிப்படையான அடையாளமாக இருந்தது. இரட்சகர் அவர்கள் மூலமாக அநேக அடையாளங்கள்,அற்புதங்கள் செய்தார். இவைகள் அனைத்தும் அதிகாரம் 4:24-30-ல் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது விண்ணப்பத்திற்கான பதில் ஆகும். இறைவன் தம்முடைய கரத்தை நீட்டி தனது அப்போஸ்தலர்கள் மூலமாக வியாதிகள்,பிசாசுகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தையும் மேற்கொண்டார். அவருடைய ராஜ்யம் வெளிப்படையாகவும்,அறியக் கூடியதாகவும் வந்திருந்தது.
கரங்களினால் செய்யப்பட்ட சபையை விசுவாசிகள் கட்டவில்லை. இறைவனுக்கு பரிசுத்த வீடு தேவையில்லாதிருந்தது. ஏனெனில் அவர்கள் இருதயங்கள் இறைவன் தங்கும் இடமாக இருந்தன. அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் சிறு குழுக்களாக கூடினார்கள். மேலும் இயேசு ஏற்கெனவே மக்களுக்கு போதித்திருந்த ஆலயத்து பிரகாரத்தில் மொத்தமாக கூடினார்கள். அங்கே அவர்கள் சங்கீதங்களைப் பாடினார்கள்,பேசினார்கள், இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். அவர்களது ஐக்கியம் அனைத்து மக்களும் நன்கு அறியும்படி காணப்பட்டது. அவர்கள் அன்புள்ளவர்களாக,மதிப்புள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லவில்லை. பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தார்கள். அவர்கள் ஐக்கியத்திற்காக இணைந்துவரும் நேரத்திற்காக வாஞ்சையோடு இருந்தார்கள்.
அந்த கூட்டத்தார் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டியிடவில்லை. அப்போஸ்தலர்கள் பொதுவாக வைத்திருந்த நிதியானது எப்போதும் தேவையுள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதற்கு ஆயத்தமாயிருந்ததை அறிந்திருந்தார்கள். அவருடைய ஊழியக்காரர்களிடம் இருந்து தாராளமாய் வெளிப்பட்ட இறைவனுடைய வல்லமையை அறிந்து கொள்ளும்படியாக முயன்றார்கள். அவர்கள் காத்திருந்து,நடுநிலையுடன்,பயத்துடன் இருந்தார்கள். இந்த விசுவாசிகள் மத்தியில் இறைவன் பிரசன்னமாயிருக்கிறதை அவர்கள் உணர்ந்தார்கள். உறுதியாய் விசுவாசித்த ஆண்களும், பெண்களும் மனந்திரும்பி கிறிஸ்தவ சபையில் இணைந்தார்கள். அவர்கள் புதுப்பிக்கப்பட்டார்கள். வல்லமை மற்றும் கர்த்தருக்குள் பாதுகாப்பினால் அணிவிக்கப்பட்டார்கள்.
எபிரெயர்கள் பாரம்பரியமாக ஆண்களை மட்டுமே கணக்கிடுவது வழக்கம். இருப்பினும் நற்செய்தியாளர் லூக்கா கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களை பெருந்திரளான பெண்கள் பின்பற்றி நடந்ததை பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமை,இரட்சிப்பை அனுபவித்தார்கள். அவர்கள் விசுவாசம் என்பது தத்துவம் சார்ந்த ஓர் நம்பிக்கை அல்ல. அவர்கள் இறைவனின் இரட்சிப்பில் உண்மையான பங்கை அடைந்தார்கள். அவர்கள் மத்தியில் வாசமாயிருந்த இறைவனின் வல்லமையில் பங்கடைந்தார்கள்.
இயேசுவின் நாட்களில் நடந்தது போல அந்நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை வெளிப்பட்டு அநேக அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன. (மாற்கு6:56) இயேசுவின் காலத்தில் தெருக்களில் வியாதியஸ்தர்கள் சுமந்து கொண்டு வரப்பட்டார்கள். கிராமங்கள், பட்டணங்கள் தோறும் அவர்களது படுக்கைகள் ,இருக்கைகளில் இயேசுவின் வஸ்திரம் படும்படியாக வைத்தார்கள். ஆகவே அநேகர் இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் நிமித்தமாக குணமாக்கப்பட்டார்கள். அதுபோலவே இப்போது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை வெளிப்படும்படி பேதுருவின் நிழல்படும்படியாக வைத்தார்கள். கிறிஸ்துவின் அன்பு என்பது மனிதனின் ஆத்துமா சுகம் அடையும்படியான, அனைவரும் அறியக்கூடியதான ஆவிக்குரிய சூழ்நிலை ஆகும்.
யூத கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் இந்த எழுப்புதல் இயக்கத்தை அறியாதோர் இல்லை. சுற்றுப்புறப் பகுதியிலிருந்து மக்கள் வந்தார்கள். அப்போஸ்தலர்கள் வியாதியஸ்தரை சுகமாக்கினார்கள். பிசாசு பிடித்தோரையும் குணமாக்கினார்கள். அவர்களது இச் செயலால் கிறிஸ்துவின் இறுதிக் கட்டளையின் இரண்டாம் பகுதி நிறைவேறியதை அவர்கள் உணர்ந்தார்கள். அப்போஸ்தலர்கள் எருசலேமில் நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள், பின்பு யூதேயா முழுவதும் நற்செய்தி பரவியது. கிறிஸ்துவின் வல்லமையினால் அவர்கள் எல்லா வியாதியஸ்தரையும் குணமாக்கினார்கள். “எல்லாரும்” என்கிற வார்த்தையை ஒரு ஆசாரியன், ஒரு மூப்பன் அல்லது ஒரு பிஷப் பயன்படுத்தவில்லை. அனுபவம் வாய்ந்த மருத்துவர் இவ் வார்த்தையை சரியான அறிவுடன் பயன்படுத்துகிறார். மனிதனை நாசமாக்கும் ஊழல்படிந்த அதிகாரங்கள், வியாதிகள், தீய ஆவிகள் இவைகளை கருத்தில் கொண்டே எல்லாரும் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவரின் வல்லமை இப்போது இயங்கும் சபையில் பிரசன்னமாய் இருந்தது. சாத்தானின் அழிவுகள் அனைத்தையும் அது மேற்கொண்டது. இவ்விதமாய் ஆண்டவருடைய சீஷர்கள் அவருடைய வெற்றியின் வளர்ச்சியில் இணைந்து கொண்டார்கள். இன்றும் கிறிஸ்து அநேகரை பாவத்தின் சங்கிலியிலிருந்தும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும், வேதனை தரும் வியாதிகளில் இருந்தும் விடுவிக்கிறார். இக்காரியமானது அவர்கள் அன்பின் ஐக்கியத்தில் இணைந்திருப்பதை விசுவாசிகளுக்கு நினைவுப்படுத்தியது அவர்கள் இறைவனின் ஆலயமாக இணைந்து விண்ணப்பம் செய்தார்கள். அன்பிலும், சத்தியத்திலும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அருமையான சகோதரனே, கிறிஸ்துவின் சபையை நீ உன்னில் உணர்கிறாயா? அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையும் அதில் கூறப்பட்ட காரியங்களின் விவரங்களையும் படியுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார்.
விண்ணப்பம்: என் ஆத்துமாவே,கர்த்தரை ஸ்தோத்தரி,என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி,அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து,உன் நோய்களை எல்லாம் குணமாக்கி,உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு,உன்னைக் கிருபையினாலும்,இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
கேள்வி:
- ஆதித் திருச்சபையில் காணப்பட்ட தாராளமனதின் இரகசியம் என்ன?