Previous Lesson -- Next Lesson
14. அனனியா; சப்பீராளின் மரணம் (அப்போஸ்தலர் 5:1-11)
அப்போஸ்தலர் 5:1-6
1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். 2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4 அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 5 அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. 6 வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
செய்யப்படும் ஒவ்வொரு பாவமும் குற்றம் மட்டும் அல்ல, அது சட்டத்திற்கு எதிரான ஒரு செயல் ஆகும். எதிரான ஒவ்வொரு செயலும் கவனத்திற்குரியது. இறைவனின் மகிமைக்கு எதிரான மீறுதல் ஆகும். தனது சொந்த நடத்தையை பிறருடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவன் தன்னைத்தானே, மனுஷீகமாக நியாயம் தீர்க்கிறான். அவன் தன்னைத்தானே மன்னித்து இவ்விதம் கூறுகிறான், “நாங்கள் அனைவரும் பலவீனர்கள். இறைவனை அறிந்தவன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் வாழுகிறான். ஒவ்வொரு பாவமும் சிறிதானாலும் அல்லது பெரிதானாலும், மரணத்தைக் கொண்டு வரும் என்று அறிந்துள்ளான். அனனியா, சப்பீராளுக்கு நிகழ்ந்த காரியம் நமக்கும் ஓர் பாடமாகும். இறைவன் விசுவாசிகளையும் பட்சிக்கும் உரிமையுடையவர் என்று இது காண்பிக்கிறது.
பரிசுத்தமான இறைவன் நம்மிடம் பொறுமையாய் இருக்கிறார். அனனியா தனது சொத்தின் பெரும்பகுதியை கொடுக்க முன்வந்தான். ஆனால் அனனியாவை உடனடியாக அழித்துவிட்டார். ஏன் இப்படி இறைவன் செயல்பட்டார் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். இறைவனின் நியாயத்தீர்ப்பின் இரகசியங்களை நாம் அறிய முடிவதில்லை. அந்த தம்பதியர் கவனக்குறைவினால் அந்த பாவத்தை செய்யவில்லை என்பதை வசனம் 2-ல் பார்க்கிறோம். அவர்கள் முன்பாகவே தீர்மானித்து, அப்போஸ்தலர்களை ஏமாற்ற முயற்சித்தார்கள். பேதுருவில் சர்வ வல்லமையுள்ளவர் பிரசன்னமாயிருந்ததை அவர்கள் நம்பவில்லை. பரிசுத்தமான இறைவன் தம்முடைய விசுவாசிகளில் வாழ்கின்றார். அவர்களது இருதயங்களை அறிகின்றார்.
பணத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த குடும்பம் எதிர்கால பாதுகாப்பிற்காக முயற்சித்திருக்கலாம். அனனியா என்ற பெயரின் அர்த்தம் “இறைவன் கிருபையுள்ளவர்". இருப்பினும் அவர்கள் இறைவனை முழுமையாக நம்பவில்லை. அவர்கள் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முயற்சித்தார்கள். அது இயலாத காரியம். இறுதியில் அவர்கள் சிருஷ்டிகரை விட பணத்தை அதிகமாக நேசித்தார்கள்.
அனனியாவும், சப்பீராளும் தங்களது சொத்து முழுவதையும் சபைக்கு கொடுக்க கடமைப்பட்டவர்கள் அல்ல. அது தன்னார்வமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. சிலர் தங்களுக்கென்று ஒரு பகுதியை வைத்துக்கொண்டார்கள். அதை பொதுவாக, வெளிப்படையாக பேசினார்கள். அனனியா, சப்பீராள் இறைபக்தியை காண்பிக்க நினைத்தார்கள். திருச்சபையில் தங்களுக்கென்று உயர்ந்த பெயரை ஏற்படுத்த எண்ணினார்கள். தங்களுடையது அனைத்தையும் கொடுத்துவிட்டார்கள் என்று சபையில் அங்கீகாரம் ஏற்படும் என்று நம்பினார்கள். உண்மையாகவே அவர்கள் கொடுத்தார்கள். ஆனால் ஒரு பகுதியைத் தான் கொடுத்தார்கள். கூட்டத்திற்கு பற்றுறுதி, பயபக்தியுடன் அனனியா வந்தான். அவன் அப்போஸ்தலரின் பிரசங்கபீடத்திற்கு முன்சென்றான். தன்னுடைய பணத்தை வழங்கினான். அவன் பண ஆசையிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவன் போல நடித்தான். அவன் தன்னைத் தானே இறைவனுக்கு முழுமையான பலியாக ஒப்புக் கொடுப்பதைப் போல காண்பித்தான். ஆனால் அவன் தனக்கென்று ஒரு பகுதி பணத்தை மறைத்து வைத்திருந்தான். இயேசு இப்படிப்பட்ட நடத்தையை “மாய்மாலம்"என்று அழைக்கிறார். இது சபையில் உள்ள மிகவும் வெறுக்கத்தக்க பாவம் ஆகும். இது பொய்களின் பிதாவாகிய சாத்தானிடமிருந்து நேரடியாக வருகிறது.
நாம் செய்யக்கூடிய அநேக பாவங்களை நாம் அறிந்திருக்கிறோம். இருப்பினும் உலகில் சிறந்த மக்களைப் போல காண்பிக்கிறோம். நாம் அனைவரும் மாய்மாலக்காரர்கள். நமது மனச்சாட்சியில் பொய்கள், ஒழுங்கீனங்கள், பிறர் பணத்தை அபகரித்தல், கோள் சொல்லுதல் மற்றும் இச்சைகள் போன்றவை தெளிவாக பதியப்பட்டிருந்தும், நமது குடும்பங்கள், சமுதாயம், சபை நம்மை துதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மை பரிபூரணமானவர்களாக, நேர்மையானவர்களாக, நம்பிக்கை வாய்ந்தவர்களாக கருதுகிறோம். நாம் அனைவரும் பெருமையுள்ள மயில்களைப் போல நடந்து கொள்கிறோம். நாம் சாவுக்கேதுவான விஷம் நிறைந்த கல்லறைகள் என்று சத்தியம் கூறுகிறது. அருமையான சகோதரனே நீ இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் வெளிச்சத்தில் உனது உண்மையான சுயத்தை ஆராய்ந்து பார்க்கிறாயா?
அனனியாவும், அவன் மனைவி சப்பீராளும் (அர்த்தம் – “அழகான) இறைவனுக்குப் பதிலாக பணத்தை தெரிந்தெடுத்தார்கள். அதுமட்டுமல்ல, எல்லா மனிதர்களும் செய்வதைப்போல மாய்மாலம் என்ற பாவத்தை அவர்கள் செய்தார்கள். கிறிஸ்துவின் கிருபை என்ற கோட்டிலிருந்து அவர்கள் படிப்படியாக விலகிச் சென்றார்கள். சாத்தான் அவர்களுடைய இருதயத்தை நிரப்பினான். இதைப் போலவே அவன் யூதாசுக்கும் செய்திருந்தான். பணத்தை நேசிப்பவன் சாத்தானின் முன்பக்கத்திற்கு பறந்து செல்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் சபைக்கு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். தீமையானவன் தனது கெட்ட கொள்கைகளை இரகசியமாக உட்செலுத்த முயலுகிறான். பொறாமை, கஞ்சத்தனம், பெருமை போன்றவற்றை இறைவனின் அரசில் கொண்டுவர முயலுகிறான். பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஒரே இருதயத்துடன் ஒரே ஆத்துமாபோல் காணப்பட்டது. ஒவ்வொருவரும் மற்றவருக்கு தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அவர்களது பரலோகப் பிதாவின் பராமரிப்பில் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இறைவனுக்கு தங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.
பூமியில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை சிறந்த அதிகாரத்துடன் சாத்தானின் சோதனையை எதிர்க்கும் திறமை உடையதாக இருந்தது. ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தின் மூலம் பேதுரு அனனியாவின் பொய்யை முன்னறிந்தார். அவனுடைய முகத்திரையை கிழித்தார். அவனுடைய வஞ்சகத்தை பரிசுத்த ஆவிக்கு எதிரான பொய் என்றழைத்தார். அனனியா இதற்கு முன்பு கிறிஸ்துவின் உள்ளான இரட்சிப்பை பெற்று அனுபவித்திருந்தான். பின்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து, பரிசுத்த ஆவிக்கு எதிராக பாவம் செய்தான்.
இறைவனின் ஆவியானவர் அப்போஸ்தலரின் வார்த்தையை உறுதிப்படுத்தினார். கடவுளுடைய நியாயத்தீர்ப்பாகிய மரணம் உடனடியாக நேரிட்டது. இப்படிப்பட்ட காரியத்தில் அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்கு எதிரான குற்றத்தை சத்திய ஆவியானவர் மன்னிக்கவில்லை. மாறாக மனந்திரும்பும்படி பாவியை நியாயந்தீர்த்தார். நம்முடைய இறைவன் அன்புள்ளவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தமானவர். அவர் மன்னிப்பதில் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். இருப்பினும் சத்திய ஆவியானவருக்கு எதிராக தன்னை கடினப்படுத்துபவன், இறைவனின் அன்புக்கு எதிராக தன்னுடைய இருதயத்தை மூடுபவன், தன்னில் தானே தீய பிசாசாக மாறுபவனுக்கு இறைவனின் இரக்கம் காண்பிக்கப்படுவதில்லை.
முதல் திருச்சபை இறைவனுக்கு அருகில் வாழ்ந்தது. இதின் மத்தியில், சாத்தானுடன் இணைந்த விசுவாசத் துரோகத்தை இறைவன் தீவிரமாக நியாயந்தீர்த்தார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற முக்கியமான சத்தியத்தின் நிறைவேறுதலாக இந்த நியாயந்தீர்ப்பு இருந்தது.
விண்ணப்பம்: ஆண்டவரே, என்னை நியாயம் தீராதிரும். நான் மாய்மாலக்காரனாய் இருக்கிறேன். நீர் என்னுடைய பாவங்களை அறிகிறீர். நான் பணத்தை சார்ந்திருப்பதை அறிகிறீர். என்னுடைய எல்லா பொய்களையும் மன்னித்தருளும். மாய்மாலத்தின் எல்லா தோற்றங்களிலிருந்தும் என்னை விடுவியும். உம்மைப்போல் நான் நீதியாய் இருக்க உதவும். எனது வாயில் வஞ்சனை வேண்டாம். சுயநலம், பெருமையிலிருந்து எங்கள் சபைகளை தூய்மைப்படுத்தும். உமது நீடிய பொறுமையினால் எங்களை பரிசுத்தப்படுத்தும்.
கேள்வி:
- பரிசுத்த ஆவியானவர் ஏன் உடனடியாக அனனியாவின் மரணத்தை கொண்டு வந்தார்?