Previous Lesson -- Next Lesson
11. பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல் (அப்போஸ்தலர் 4:1-22)
அப்போஸ்தலர் 4:1-7
1 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, 3 அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5 மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், 6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, 7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
இறைவனின் ஆசீர்வாதம் எங்கெல்லாம் தோன்றுகிறதோ அங்கு நரகத்தின் வல்லமையும் வெளிப்படுகிறது. பேதுரு மற்றும் யோவான் மூலமாக இயேசு சப்பாணியை சுகமாக்கினார். பெருங்கூட்ட மக்கள் நற்செய்தியைக் கேட்க திரண்டு வந்தார்கள். ஆலய காவல்காரர்கள் தலையிட்டு குறுக்கீடு செய்தார்கள். ஏனெனில் அந்த அற்புதம் சந்தேகத்துக்கிடமின்றி வெளிப்படையாக நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. மக்கள் பெருந்திரளாய் கூடியது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது. மதத்தலைவர்கள் ஆசாரியர்களுடன் கைகோர்த்து நின்றார்கள். அவர்கள் ஆலயத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை உடையவர்களாக இருந்தார்கள். கல்வியில் சிறந்து விளங்கிய சதுசேயர்கள், மக்கள் கூட்டத்தை வெகுவிரைவில், அனுமதியின்றி பெருந்திரள் கூட்டத்திற்கு பிரசங்கித்த குற்றமற்ற மீனவர்கள் மீது எதிராக திரும்பும்படி தூண்டினார்கள். ஏனெனில் பொது இடத்தில் பேசுவதற்குரிய தகுதி வேத நிபுணர்கள் மற்றும் தத்துவஞானிகளுக்கு மட்டுமே உரியதாகக் காணப்பட்டது. அவர்களது நம்பிக்கைக்கு எதிராக கலிலேயாவில் இருந்து வந்த மனிதர்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று கூறியது, அவர்களுக்கு எரிச்சலூட்டியது. அவர்கள் மனதை துன்புறுத்தியது. ஒளியூட்டப்பட்ட கல்விமான்கள் உயிர்த்தெழுதலின் கொள்கையை மறுதலித்தார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் குறித்து சாட்சி கூறியது தான் அப்போஸ்தலர்கள் சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. அவர்கள் ஆலய காவல்காரர்களால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். குளிர்மிகுந்த அந்த இரவில் அவர்கள் சப்பாணியை சுகமாக்கிய இயேசுவின் வெற்றியை நினைத்து, விண்ணப்பம் செய்து, துதிகளை ஏறெடுத்து, நன்றி செலுத்தினார்கள். ஆலயத்தில் பெருந்திரளான மக்களுக்கு இயேசுவை குறித்து சொல்ல கிடைத்த வாய்ப்பிற்காக அவர்கள் ஆண்டவரை மகிமைப்படுத்தினார்கள். அடுத்த நாளிற்கான போராட்டத்திற்காக அவர்கள் விண்ணப்பத்துடன் தங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர்களின் நம்பிக்கை மிகுந்த செய்தி பெருந்திரள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலுவையில் அறையப்பட்டு, மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவை அநேகர் நொறுக்கப்பட்ட இருதயத்துடன் விசுவாசித்தார்கள். அவர்கள் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டார்கள். ஆதித்திருச்சபையில் இயேசுவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாக உயர்ந்தது. அவர்கள் பேராலயத்தையோ அல்லது மாளிகை வீட்டையோ, பெற்றிருக்கவில்லை இருப்பினும் அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்குள் தங்கியிருந்து, அவர்கள் மூலமாக செயல்பட்டார். இயேசுவின் நிமித்தமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தோருக்காக அவர்கள் விண்ணப்பம் பண்ணும்படி கூடினார்கள்.
மறுநாள் யூதர்களின் உயர்நீதிமன்றமான சனகெரிப் ஆலோசனைச் சங்கம் விசாரனைக்காக கூடினார்கள். இந்த ஆலோசனைச் சங்கத்தில் இயேசுவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட பிரதான ஆசாரியனின் குடும்ப உறுப்பினர்கள் இருந்தார்கள். இறைதூஷணம் செய்தார் என்று குற்றம் சுமத்தி அவருக்கு மரணதண்டனை கோரினார்கள். அவர்கள் மத்தியில் இறைவனின் குமாரன் கட்டப்பட்டவராக நின்றுகொண்டிருந்த போது இவ்வாறு கூறியிருந்தார். “இதுமுதல் மனுஷகுமாரன் பிதாவின் வல்லமை பொருந்திய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பீர்கள்” அந்த இறைவனின் வல்லமை மெய்யாகவே இந்த இரண்டு அப்போஸ்தலர்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டு செயல்பட்டது.
பேதுருவும், யோவானும் தந்திரம் நிறைந்த காய்பா மற்றும் அதிகாரம் நிறைந்த அன்னா முன்பாக நின்று கொண்டிருந்தார்கள். இருப்பினும் இயேசு, தன்னை துன்புறுத்தியவர்களான நீதிபதிகளுக்கு மனந்திரும்பும்படியான வாய்ப்பை மீண்டும் ஒருமுறை வழங்கினார். இந்த கூடுகை அப்போஸ்தலர்களை விட அந்த நீதிபதிகளுக்கே மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களுக்கு இப்போதும் மனந்திரும்பி, உயிருள்ள, வெற்றிசிறந்த ஆண்டவராகிய கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்படியான வாய்ப்பு இருந்தது.
நீதிமன்றத்தை நிர்வாகித்த திறமைபடைத்த அவர்கள் ஆரம்பநிலைக் கேள்விகளுக்குள்ளே மெதுமெதுவாகச் செல்லவில்லை. அவர்கள் சீஷர்களிடம், உங்களை அனுப்பியது யார்?” என்று கேட்டார்கள். அவர்களில் செயல்படும் வல்லமை, அதிகாரத்தின் தன்மையைக் குறித்து வினவினார்கள். திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவிடம் கேட்ட அதே கேள்வி தான் இது. அவர்கள் இறைவனின் வல்லமையை உணர்ந்தார்கள். அற்புதங்களைக் கண்டார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளையோ அல்லது செயல்களையோ புரிந்துகொள்ளவில்லை. இறைவனின் வார்த்தையின் வல்லமையை அவர்கள் அடையாளம் காண முடியவில்லை. ஆண்டவரின் சத்தத்தைக் கேளாதபடி தங்களை கடினப்படுத்தினார்கள். அவர்களது இருதயம் பெருமை, கர்வத்தினால் நிறைந்திருந்தது. நியாயப்பிரமாண சட்டதிட்டங்களில் உறுதியாக காணப்பட்டார்கள். காதுகளால் கேட்டும், கண்களால் கண்டும் உணராதிருக்கிற காது மற்றும் கண்ணுடன் இருப்பது ஓர் துரதிர்ஷ்டவசமான காரியம்.
விண்ணப்பம்: ஆண்டவரே, எனது இருதயத்தை திறந்தருளும். உமது ஆவியானவரை என் மனதில் ஊற்றும். எனது சித்தத்தை ஒளிரூட்டும். நான் உமது வார்த்தையை நேசிக்க, உமது வெளிப்பாட்டில் விசுவாசம் வைக்க, உமது கட்டளைகளை சுமந்து செல்ல, உமது கவர்ந்திழுக்கும் அன்பிற்கு எதிராக செயல்படாமல் இருக்க உதவும். எங்கள் தேச மக்களின் காதுகளைத் திறந்தருளும். உலகத்து மக்களின் கண்களைத் திறந்தருளும். அவர்கள் இயேசுவாகிய உம்மை இரட்சகராக அறிந்து கொண்டு, உம் மீது விசுவாசம் வைத்து. நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள அருள் செய்யும்.
கேள்வி:
- ஆலோசனைச் சங்கம் மற்றும் இரண்டு அப்போஸ்தலர்களின் சந்திப்பு நமக்கு எதை சிறப்பித்துக் கூறுகின்றது?