Previous Lesson -- Next Lesson
8. ஆதித் திருச்சபையின் ஆவிக்குரிய வாழ்க்கை (அப்போஸ்தலர் 2:42-47)
அப்போஸ்தலர் 2:42-47
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். 45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.
இதுவரை நற்செய்தியாளனாகிய லூக்கா, விசுவாசிகளுடைய உள்ளத்தில் வாழும்படி பரிசுத்த ஆவியானவரை கிறிஸ்து எவ்வாறு அனுப்பினார், இந்த தகப்பனாகிய ஆவியானவர் எவ்வாறு பொழிந்தருளப்பட்டார், மகிழ்ச்சியையும், சத்தியத்தையும், பரிசுத்தத்தையும் அன்புடன் கலந்து அன்பின் பெருங்காற்றாய் எவ்வாறு வீசினார் ஆகியவற்றைப் பற்றி விவரித்தார். இனிமேல் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு, ஏன் செயல்படுகிறார் என்பதைக் காண்பிக்கப்போகிறார். பிதாவினுடைய வாக்குத்தத்தம் நிறைவேறிவிட்டது; கிறிஸ்துவின் வல்லமை செயல்பட்டு வெற்றிகண்டு விட்டது. உண்மையில் அது இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒரு புதிய கிருபையின் யுகம் பிறந்து விட்டது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுடைய சுயத்தை உடைத்து, அவர்களை அவர் சிறந்த மனிதர்களாக மாற்றுகிறார். அவர்களுடைய விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய நன்மையினால் அவர்கள் நிரப்பப்படுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் நடைமுறையில் எவ்வாறு தோன்றுகிறார்? லூக்கா பரிசுத்த ஆவியானவருடைய தன்மையைப் பற்றியும் அவருடைய செயலைப் பற்றியும் சுருக்கமாகவும், அழகாகவும், அடையாள மொழியிலும் விளக்குகிறார். முக்கியமாக அவர் இறைவனுடைய வார்த்தையின் முழுமைக்குள், சிறப்பாக அப்போஸ்தலருடைய போதனைகளுக்குள் அவர் விசுவாசிகளை நடத்துகிறார். கிறிஸ்து அனுதினமும் தம்முடைய மாணவர்களுக்குப் போதிக்கும் நற்செய்தியை ஆழமாகவும் தொடர்ச்சியாகவும் கற்றுக்கொள்ளாமல் தெய்வீக ஆவியிடமிருந்து நாம் வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. அப்போஸ்தலர்களுடைய உபதேசம் இல்லாமல் நம்முடைய விசுவாசத்திற்கு அடிப்படையே இல்லை.
அனுதினமும் இறைவனுடைய வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய ஊட்டச்சத்தின் மூலமாக இறைவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும் காரியம் தனிமையில் நடைபெறுவதில்லை. ஆதித்திருச்சபை விசுவாசிகள் ஒருவரோடொருவர் அன்பின் ஐக்கியம் உடையவர்களாக தங்களைவிட மற்றவர்களை மேன்மையாகக் கருதினார்கள். இறைவனுடைய ஆவியானவர் அன்பின் ஆவியானவராயிருப்பதால், இந்த அன்பின் ஐக்கியம் இல்லாமல் கிறிஸ்தவமே இல்லை.
ஆதிக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய இரட்சிப்பிலும் அன்பின் ஐக்கியத்தில் மட்டும் நிலைத்திராமல், அவர்கள் கர்த்தருடைய பந்தியிலும் பங்கெடுத்தார்கள். அப்பம், இரசம் ஆகிய அடையாளங்கள் மூலமாக கிறிஸ்து தங்களில் வாழ்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள் எழுப்புதல் அடைந்து மகிழ்ச்சியிலும், நன்றியறிதலிலும் பெலப்படுத்தப்பட்டார்கள்.
இந்த அடிப்படையான கிறிஸ்தவ குணாதிசயங்களோடு விண்ணப்பங்கள், வேண்டுதல்கள், துதிப் பாடல்கள், பாவ அறிக்கைகள் மற்றும் மன்றாட்டுகள் ஆகியவையும் அவர்களுடைய வாழ்வில் மேலோங்கிக் காணப்பட்டன. அவர்களுடைய கூடுகைக்கு அடிப்படையாயிருந்தது உலக சிந்தையோ, தத்துவ ஞானமோ அல்ல, அவர்கள் எப்போதும் தொடர்பு வைத்திருக்கும் அவர்களுடைய பிதாவாகிய இறைவனுடன் அவர்களுக்கிருந்த உறவு ஆகும். அன்புள்ள சகோதரனே, நீங்கள் தொடர்ச்சியாக மற்ற சகோதரர்களுடன் இணைந்து விண்ணப்பிக்கிறவராயிருக்கிறீர்களா?
அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தது ஒரு மோலோட்டமான நம்பிக்கையினால் அல்ல. அவர்கள் இறைவனுடைய பரிசுத்தத்தின் மகிமையை அனுபவித்திருந்தபடியால் அவர்களுடைய விசுவாசம் ஆழமானதாக இருந்தது. அவர்கள் அவருக்கு முன்பாக உறுதியாக இருந்தார்கள். அவர்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்து, அவரையே நம்பியிருந்தார்கள். தாழ்மையும், பயபக்தியும், இறைவனுடைய மேன்மையைக் குறித்த பயமும் எப்போதும் அவர்களிடத்திலிருந்தது. நம்முடைய உயிருள்ள விசுவாசத்திற்கு அடிப்படையாயிருக்கக்கூடிய இறைவனிடமான பயத்தையும் அன்பையும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் உருவாக்குகிறார்.
பரிசுத்த ஆவியானவர் யாரில் குடிகொண்டிருக்கிறாரோ அவரில் பரிசுத்த திரித்துவ இறைவனுடைய தெய்வீக வல்லமை பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தில் விளங்கும். நம்முடைய பிதாவானவர் தம்முடைய இரக்கத்தின் முழுமையிலிருந்து அனுதினமும் தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கு பதிலளித்து, அவர்களை இரட்சிப்பினால் ஆசீர்வதித்து, பாதுகாத்து, குணப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி, அவர்களை வழிநடத்துகிறார்.
பரிசுத்த ஆவியானவர் தாராளமாக மகிழ்ச்சியுடன் கொடுக்கும்படி விசுவாசிகளைத் தூண்டுவதால், அவர்கள் தங்கள் பணப்பையைச் சுருக்கிக்கொள்வதில்லை. “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆரம்ப காலத்து கிறிஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பண ஆசையில்லாதவர்களாக, திருச்சபையின் பொதுவான தேவைக்காக அந்த வருமானத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்து, ஒருவரோடொருவர் இணங்கிப் போனார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் கஞ்சத்தனம், பகைமை, பொருளாசை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, நடைமுறை அன்பில் வழிநடத்தப்பட்டார்கள்.
அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவர்கள் உயிரோடிருக்கும்போதே கிறிஸ்துவின் மகிமையை தங்களால் காணமுடியும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் அவருடைய மகிமையின் அரசிற்காகக் காத்திருக்கும்போது, இரவும் பகலும் அவரை நினைத்து, தங்கள் இரட்சகராகிய அவரில் அதிகமாக அன்புகூர்ந்தார்கள். அவர்கள் தங்களுடைய விசுவாசம் உண்மையானதுதானா என்றோ, அவர்களுடைய அன்பு உறுதியானதா என்றோ, அவர்களுடைய நம்பிக்கை நிச்சயமானதுதானா என்றோ தங்களுக்குள் சந்தேகித்து விவாதிக்கவில்லை. அவர்கள் தங்கள் இருதயத்தினால் அவற்றை எளிமையாக விசுவாசித்து அதில் மகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய சத்தியத்தில் மகிழ்வடைந்து, களைப்படையாமல் எப்போதும் இறைவனைத் துதித்தார்கள்.
கிருபையினால் தங்கள் விசுவாச வாழ்வை ஆரம்பித்த அவர்கள் தங்கள் வீடுகளில் கூடிவருவதை விட்டுவிடவில்லை. அவர்கள் வீடுகள் தோறும் கூடிவந்து அப்போஸ்தலருடைய உபதேசத்திற்குச் செவிகொடுத்து, பொதுவான விண்ணப்பங்களை ஏறெடுத்தார்கள். அவர்கள் தேவாலயத்தைப் புறக்கணிக்காவிட்டாலும் அவர்களே கைகளினால் கட்டப்படாத, பரிசுத்த ஆவியின் ஆலயங்களாக மாறியிருந்தார்கள்.
அப்படிப்பட்ட திருச்சபை இன்பமானது, கவர்ச்சிகரமானது. இந்த அன்பினால் கவரப்பட்ட அநேகர்: “நீங்கள் எவ்வாறு மாற்றமடைந்தீர்கள்?” என்றும் “இது எப்படி நடந்தது?” என்றும் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “உயிருள்ளவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியாகிய தம்முடைய வரத்தை எங்களுக்குக் கொடுத்தார். அதனால்தான் நாங்கள் இவ்வாறு மாற்றமடைந்தோம்” என்று பதிலளித்தார்கள். அவர்கள் இவ்வாறு சாட்சிபகர்ந்ததன் காரணமாக புதிய மக்கள் அனுதினமும் திருச்சபையில் இணைக்கப்பட்டார்கள். அந்த எழுப்புதலினால் திருச்சபை வளர்ச்சியடைந்தது.
இந்த இடத்தில்தான் நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் “திருச்சபை” என்ற வார்த்தையை முதன்முதலில் வாசிக்கிறோம். இதுவரை நாம் அந்த மக்களைக் குறித்துக் கொடுத்த விளக்கங்கள் கிறிஸ்துவின் உயிருள்ள உடலாகிய திருச்சபையின் குணாதிசயங்கள் ஆகும். பரிசுத்த ஆவியானவருடைய செயல் வெறுமனே தனிப்பட்ட ஆத்துமாக்களில் மட்டும் செயல்படாமல் திருச்சபையாகிய பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் முடிவடைகிறது. நம்முடைய இறைவன் அன்பாயிருக்கிறபடியால் அந்த அன்பு விசுவாசிகளுடைய ஐக்கியத்தில்தான் உணரப்படுகிறது.
விண்ணப்பம்: அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய அன்பு மனிதர்களை ஒன்றாக இணைப்பதற்காக உமக்கு துதியுண்டாவதாக. உம்முடைய அன்பினால் அவர்கள் ஒருவரையொருவர் மன்னித்து, மற்றவர்களைத் தங்களிலும் மேன்மையானவர்களாகக் கருதுகிறார்கள். திருச்சபையாக நீர் எங்களை உயிர்ப்பியும். உம்முடைய ஆவியினால் எங்களுக்குள் இருக்கிற பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் துணை செய்யும். பண ஆசையிலிருந்து எங்களை விடுவியும். ஆமென்.
கேள்வி:
- திருச்சபையைக் குறித்து நாங்கள் மேலே கொடுத்த விளக்கங்களிலிருந்து உயிருள்ள திருச்சபையின் அடிப்படைத் தன்மையைக் குறிக்கும் ஒரு வார்த்தையை எழுதுக.
கேள்விகள் – 1
அன்பார்ந்த வாசகருக்கு,
நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுக்கு நாங்கள் எழுதியிருக்கும் இந்த விளக்கங்களை வாசித்ததால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும். உங்கள் பதில்கள் 90 சதவீதம் சரியாக இருந்தால் இந்த வேதவிளக்க வரிசையின் அடுத்த நூலை உங்கள் நன்மைக்காக இலவசமாக அனுப்பித் தருவோம். உங்கள் விடைத்தாளில் உங்கள் பெயரையும் முகவரியையும் முழுமையாகக் குறிப்பிடத் தவறவேண்டாம்.
- அப்போஸ்தலர் நடபடிகளை எழுதியபோது லூக்காவில் நோக்கங்கள் என்ன? தியோப்பிலுவைப் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்?
- லூக்காவினுடைய முதல் நூலில் அவர் என்ன எழுதினார்? அவருடைய இரண்டாவது நூலின் நோக்கமும் கருப்பொருளும் யாது?
- பிதாவினுடைய வாக்குறுதி என்ன?
- பரிசுத்த ஆவியானவர் யார்? அவருடைய திட்டம் என்ன?
- இரண்டு தேவதூதர்களுடைய கூற்றுப்படி கிறிஸ்து எவ்வாறு திரும்ப வருவார்?
- தொடர்ச்சியான இந்த விண்ணப்பத்திற்காக கூடிவந்த இந்த ஆண்களும் பெண்களும் யார்?
- யூதாஸின் மரணத்திலிருந்து நீங்கள் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்?
- கிறிஸ்துவின் சேவையில் சேர்வதற்கான தகுதிகள் யாவை?
- பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வெளிப்பட்டார்?
- அப்போஸ்தலர்கள் பேசும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?
- பேதுருவினுடைய பிரசங்கத்தின் முதல்பகுதியின் முக்கிய குறிப்புகள் என்ன?
- யூதர்கள்தான் இயேசுவைக் கொலைசெய்த குற்றவாளிகள் என்று பேதுரு அவர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் என்ன?
- தாவீதின் தீர்க்கதரிசனத்திலிருந்து அந்த மக்கள் எதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று பேதுரு விரும்பினார்?
- கிறிஸ்து ஏன் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார்?
- நாம் எவ்வாறு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம்? அவர் ஒரு விசுவாசியில் குடிகொள்வதற்கான நிபந்தனைகள் யாவை?
- யார் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்? ஏன்?
- திருச்சபையைக் குறித்து நாங்கள் மேலே கொடுத்த விளக்கங்களிலிருந்து உயிருள்ள திருச்சபையின் அடிப்படைத் தன்மையைக் குறிக்கும் ஒரு வார்த்தையை எழுதுக.
நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் எழுதுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அதன்மூலம் நீங்கள் நித்திய பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நாங்கள் உங்கள் பதில்களை விண்ணப்பத்துடன் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய விலாசம்.
எங்களது முகவரி:
Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany
Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net