Previous Lesson -- Next Lesson
7. அப்போஸ்தலருடைய பணியினால் ஏற்பட்ட பயன் (அப்போஸ்தலர் 2:37-41)
அப்போஸ்தலர் 2:39-41
39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
தங்கள் மனதிலே குத்தப்பட்டவர்களாகி மனந்திரும்பிய அந்த மக்கள் கூட்டம் கிறிஸ்துவிடம் வரலாம் என்று பேதுரு அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் உண்மையில் மனந்திரும்பி, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக திருமுழுக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே காரியம். அவர் அவர்களை இந்த அறிவில் பலப்படுத்தி, இறைவனுடைய அன்பின் மேன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்தும்படி அவர்களிடம்:
“பரிசுத்த ஆவியானவர் இறைவன் நமக்கு வழங்கும் கொடை, அவரை நாம் நம்முடைய முயற்சியினால் சம்பாதிக்க முடியாது.” இறைவன் நம்முடைய இருதயங்களில் வந்து வாழ்வதற்கு நம்மில் யாருக்கும் தகுதியில்லை. கிறிஸ்துவின் சொந்த இரத்தத்தினாலே அவர் சம்பாதித்த இந்தக் காரியம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சலாக்கியமாகும். கிறிஸ்து சிலுவையில் மரணத்தை ருசிபார்த்திருக்கவில்லை என்றால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள நாம் தகுதியானவர்கள் அல்ல. அவர் நமக்காக மரணத்தை ருசிபார்த்து, அனைத்து மனிதர்களுடைய பாவங்களையும் நீக்கிவிட்டார். ஆகவே எந்தப் பிரச்சனையும் இன்றி நாம் அனைவருமே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாம் இறைவனுக்கு முன்பாக நம்முடைய நிலையை உணர்ந்து, மனந்திரும்பி, பாவங்களை அறிக்கை செய்து, அவற்றை விட்டுவிடும்படி தீர்மானிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தராயிருக்கிற காரணத்தினால் அவர் நம்முடைய பொய்களோடும் அசுத்தத்தோடும் ஒத்துப்போக முடியாது. சத்திய ஆவியாகிய அவர் குமாரனை மகிமைப்படுத்தி, நம்முடைய பெருமையைத் தாழ்த்துகிறார். நீங்கள் அவருடைய திட்டத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, இறைவனுடைய மகனாகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் நீங்கள் இறைவனோடு ஒப்புரவாக்கப்படுவீர்கள். அப்பொழுது நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும் உங்களை எவ்வளவாகத் திறந்துகொடுக்கிறீர்களோ, அவ்வளவாக நீங்கள் இறைவனுடைய வல்லமையினால் நிரப்பப்படுவீர்கள். உங்களைப் பிதாவினுடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்த விரும்பும் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம். அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள். உங்களை இறைவனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்ற வேண்டும் என்பதே பரிசுத்த ஆவியானவருடைய பரிசுத்தமாகுதலின் நோக்கமாகும்.
பிதாவினுடைய வாக்குத்தத்தம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. இறைவனுடைய அழைப்பைக் கேட்டு, இரட்சகரை விசுவாசித்து, தங்கள் கடந்த கால தீய வாழ்விலிருந்து மனந்திரும்பிய அனைத்து மனிதர்களுக்கும் அந்த வாக்குறுதி நிறைவேறும். அது நிறத்தின் அடிப்படையிலோ, ஞானத்தின் அடிப்படையிலோ, வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலோ யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் வித்தியாசம் பார்க்கமாட்டார். யாரெல்லாம் மனந்திரும்பி கிறிஸ்துவின் சிலுவையை எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள் இறைவனுடைய தத்துப் பிள்ளைகளாகிறார்கள். அவர்கள் இறைவனுடைய ஒரே மகனாகிய கிறிஸ்துவை அறிந்துகொண்டு, அவருடைய முழுமையில் பங்கடைகிறார்கள். அனைத்து மக்களையும் பரிசுத்த ஆவியானவர் அழைக்க வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாயிருக்கிறது. யார் செவிகொடுப்பார்கள்? யார் அவரிடத்தில் வருவார்கள்? யார் தங்களுடைய பாவத்தை அறிந்துகொள்வார்கள்? யார் கிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய வல்லமையில் வாழத் தொடங்குகிறார்களோ அவர்களே.
பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தனிப்பட்ட முறையில் அங்கு வந்தவர்களிடம் பேசி, இரட்சிப்பின் இரகசியங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அவர்களுடைய இருதயத்தின் தீமையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, இறைவனுடைய அன்பின் மேன்மையை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனைத்து மனிதர்களையும் “மாறுபாடுள்ள சந்ததி” என்று அழைக்கிறார்கள். எந்த மனிதனும் நீதியுள்ளவன் அல்ல. அனைவரும் தங்கள் நடத்தையில் தந்திரமானவர்களாகவும் தங்கள் உள்ளத்தில் கேடுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். யாரும் இந்த உலகத்தில் நல்லவர்களும் நேர்மையாளர்களாகவும் இருப்பதில்லை. அனைவரும் பொய், அநியாயம், ஏமாற்று, தந்திரம், வெறுப்பு, கொலை, பொறாமை, மற்றும் சுயநலம் ஆகியவற்றோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுயநலத்திலிருந்து நம்மை விடுவித்து, கிறிஸ்துவினிடத்தில் அழைத்து, நம்மை மீட்டுக்கொள்கிறார். அவர் இந்த உலகத்தைச் சீர்திருத்தாமல், விசுவாசிகளின் உள்ளான வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறார். உங்கள் குணாதிசயம் மாற்றப்படவேண்டியதல்ல உங்கள் தேவை. உங்களுக்குத் தேவையானது இரட்சிப்பு. அனைத்து மனிதர்களைப் போலவும் நீங்கள் இறைவனுடைய கோபத்திற்கு ஆளானவராகக் காணப்படுகிறீர்கள். “இந்த மாறுபாடுள்ள சந்ததியிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்” என்று பேதுரு உங்களுக்கு அழைப்பு விடுகிறார். நீங்கள் “பாதி இரட்சிக்கப்பட்டும் பாதி மாறுபட்டும்” இருக்க வேண்டும் என்றோ அல்லது “கிறிஸ்துவை விசுவாசித்து, உங்கள் பாவங்களில் நிலைத்திருங்கள்” என்றோ உங்களுக்குச் சொல்லப்படவில்லை. இல்லை. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வந்தார். கிறிஸ்துவை யாரெல்லாம் உண்மையாகவும் முழுமையாகவும் விசுவாசிக்கிறார்களோ அவர்களை அவர் தம்முடைய வல்லமையினாலே இரட்சிக்கிறார். நம்முடைய இரட்சிப்பு சிலுவையில் நிறைவேற்றி முடிக்கப்பட்டது. கிறிஸ்துவின் அன்பை நீங்கள் விசுவாசித்து, அவருடைய வல்லமைக்கு உங்களைத் திறந்துகொடுப்பீர்களானால், இந்த நன்மையை பரிசுத்த ஆவியானவர் அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் மெய்யாக்குவார்.
திருச்சபை பிறந்த நாளில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பைக் கேட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரமாயிருந்தது. ஒரு மீனவரும், கல்லாதவருமாகிய பேதுருவின் பிரசங்கத்திற்கு கிடைத்த பலனைப்போல மிகச் சில பிரசங்கிகளுக்கே திருச்சபை வரலாற்றில் பலன் கிடைத்திருக்கிறது. இறைவன் அத்தருணத்தில் பேதுருவின் மூலமாகத் தனிப்பட்ட முறையில் மக்களோடு பேசினார்.
பரிசுத்த ஆவியானவர் அந்த மக்களுடைய இருதயக் கண்களைத் திறந்து, அவர்களுடைய மனதில் வெளிச்சத்தைக் கொடுத்தபடியால், அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக உடனடியாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அந்த மக்கள் கேட்ட செய்தியைப் பற்றிச் சிந்தித்து மனந்திரும்புவதற்கு அப்போஸ்தலர்கள் நேரம் கொடுக்கவில்லை என்பது எத்தனை ஆச்சரியமானது. அது மட்டுமல்ல, அவர்கள் இறைவனைக் குறித்த அறிவில் வளரவேண்டும் என்று காத்திராமல் அவர்களுடைய அந்த நிலையிலேயே அப்போஸ்தலர்கள் அவர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். விசுவாசம் என்பது மேலோட்டமாக அறிவுசார்ந்ததோ, தெளிந்த புத்தியுடன் கூடிய ஆனமீக காரியமோ அல்ல. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் மீது தமது இன்பத்தைப் பொழிந்தருளி, மனந்திரும்பாதவர்களை நியாயம்தீர்த்தார். பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் விசுவாசத்தைப் பற்றிய விதிமுறைகளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அவை கிறிஸ்துவின் வாழ்வு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரலோகத்திற்கு எழுந்தருளிப் போய், பிதாவினுடைய வலது பக்கத்தில் அமருதல். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அவற்றை விசுவாசிப்பவர், கிறிஸ்துவின் திருமுழுக்கில் தனக்குத் தானே மரணிக்கிறார். அப்போது அவர் உடனடியாகப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவராகிறார்.
விண்ணப்பம்: ஓ, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, மாறுபாடுள்ளவர்களும் பாவத்தினால் கேடடைந்தவர்களுமாகிய எங்களில் நீர் வாழும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவரை அதிசயமாக எங்களுக்குக் கொடுத்தீரே, அதற்காக உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். நீர் எங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து எங்களைச் சுத்திகரித்தபடியால் உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உம்முடைய அன்பினாலும் சத்தியத்தினாலும் எங்களை நிரப்பும், அப்போது நாங்கள் அதிக தாழ்மையினால் நிறைந்து, அனைவரும் உம்மைப் பின்பற்றும்படி அழைப்பு விடுவோம். நீர் ஒவ்வொருவரையும் இரட்சித்து, அவர்களுக்குப் பரிசுத்த ஆவியாகிய வரத்தைக் கொடுப்பதற்காக உரிமையைப் பெற்றிருக்கிறீர். உயிரோட்டமும், நிலையும், மேன்மையுமான விசுவாச வாழ்க்கைவாழ எங்களை நடத்தியருளும்.
கேள்வி:
- யார் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்? ஏன்?