Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 015 (Edification through the Ministry)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

7. அப்போஸ்தலருடைய பணியினால் ஏற்பட்ட பயன் (அப்போஸ்தலர் 2:37-41)


அப்போஸ்தலர் 2:37-38
37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

ஒரு மனிதன் மெய்யாகவே மனந்திரும்பி தன்னுடைய பழைய வாழ்க்கையைப் புறக்கணிக்காவிட்டால் அவனில் பரிசுத்த ஆவியானவர் வாழமாட்டார். ஒவ்வொரு பாவமும் இறைவனுக்கும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கும் எதிரான மீறுதலாயிருக்கிறது. அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திற்குள் குடியிருப்பதற்கு வருவதற்கு முன்பாக அதிலிருக்கும் கீழ்ப்படியாமையை அவர் உடைக்கிறார். அதன் பிறகுதான் நாம் அவருடைய பரிசுத்த ஆலயமாக ஏற்படுத்தப்பட முடியும். பரிசுத்த ஆவியானவரின் இந்த நியாயத்தீர்ப்பு ஒரே வேளையில் மாபெரும் ஆசீர்வாதமாகவும், ஆசீர்வாதங்கள் அனைத்திலும் மேலானதாகவும் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவரின் இந்த நியாயத்தீர்ப்பையும் கடிந்துகொள்ளுதலையும் நொருங்குண்ட மனதோடு பெற்றுக்கொள்ளும் ஒருவர் நித்திய தண்டனையிலிருந்து தப்பித்து, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்.

பரிசுத்த ஆவியானவரின் வருகையின்போது உண்டான சத்தத்தை அறிந்த யூதர்கள் சீடர்கள் இருந்த வீட்டிற்கு ஓடிச்சென்றார்கள். பேதுரு பேசியதைக் கேட்டபோது துக்கமும், எச்சரிக்கையும் அடைந்தார்கள். அவர்கள் உயிருள்ள இறைவனுக்கு முன்பாக நிற்கும் தாங்கள் கீழ்ப்படியாத சொலைகாரர்கள் என்பதையும் இறைவனுடைய கோபத்தினால் வரும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் தங்களை நியாயப்படுத்தவோ அவர்களுடைய குற்றத்தைப் பற்றி கேள்வி கேட்கவோ முற்படவில்லை. மாறாக, அவர்கள் பயத்தோடு, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். இந்தக் கேள்வி இரண்டு காரியங்களை வெளிப்படுத்துகிறது.

முதலாவது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் உணர்த்தப்பட்டு, தான் இறைவனை விட்டு விலகிச் செல்கிறேன் என்பதை அறிந்துகொள்ளும்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத பரிதாப நிலையில் இருக்கிறான். பேதுரு இயேசுவை மறுதலித்ததும் சேவல் கூவியபோது எவ்வாறு பேதுருவின் தன்னம்பிக்கை முற்றிலும் தகர்ந்துபோனதோ அதேபோல பாவ உணர்வு பெற்றவனும் தன்நம்பிக்கையை இழந்து போகிறான்.

இரண்டாவது, உள்ளம் உடைந்த ஒருவன் இறைவனையும் அவர் தனக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் முழுவதும் அறியாத நிலையில் இருக்கிறான். அவன் செய்யக்கூடியது “நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று தன்னிடமே கேட்டுக்கொள்வது மட்டும்தான். நம்முடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்தமுள்ள இறைவனுக்கு முன்பாக பயனற்றவையாகவும் அசுத்தமானதாகவும் காணப்படும். ஒவ்வொரு மனிதனும் தன்னில்தானே குதர்க்கமானவனாக காணப்படுகிறான். தன்னுடைய இரட்சிப்புக்காக தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று கருதும் மனிதன் இறைவனைத் தனக்காக எதையும் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. இயற்கை சுபாவமுள்ள மனிதன் தன்னைத் தானே திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறான். அவன் தன்னைத் தானே நீதிமானாக்கவும் சுய விடுதலையைப் பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறான். அவன் இறுதிவரை தன்னுடைய சுய பலத்திலேயே வாழ விரும்புகிறான். தீமையும் சீரழிவும் நிறைந்த சுயம் நியாயத்தீர்ப்பு நாள்வரையிலும் அவனை ஆட்கொள்கிறது.

மனந்திரும்பியவர்கள் சுயமாக என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு சொல்லவில்லை. அதற்காக நாம் இறைவனுக்க நன்றி செலுத்துவோம். அதற்கு மாறாக அவர்களுடைய சிந்தனையிலும் இயேசுவைக் குறித்த நம்பிக்கையிலும் மாற்றம் வேண்டும் என்று பேதுரு கோரினார். மனமாற்றம் என்பது சரீரத்திலோ மூளையிலோ ஏற்படும் மாற்றமல்ல. அது உள்ளத்திலும், சித்தத்திலும், ஆழ்மனதிலும் ஏற்படும் மாற்றமாகும். அது நம்முடைய சிந்தனைகள், உணர்வுகள், சித்தம் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான மாற்றத்தை உள்ளடக்கியது. சர்வாதிகார நாடுகளில் நடைபெறுவதைப் போல அது மூளைச்சலைவையின் மூலமாக ஏற்படும் மாற்றம் அல்ல. புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி இறைவனுடைய வல்லமைக்கு ஒருவன் தன்னைத் திறந்துகொடுப்பதால் ஏற்படும் மனப்பூர்வமான மாற்றமாயிருக்கிறது. அதன் பிறகு அவன் கிறிஸ்துவின் வார்த்தைகளையும் அவருடைய அப்போஸ்தலருடைய வார்த்தைகளையும் மகிழ்ச்சியோடும் நன்றியுள்ள இருதயத்தோடும் கேட்டுப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான்.

மனமுடைந்த மக்களைப் பார்த்து பேதுரு பேசுகிறார்: “உங்களுடைய தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்களை நீங்களே மீட்கும் முயற்சியைக் கைவிடுங்கள். உங்கள் வாழ்வின் தோல்விகளையும் இறைவனுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் செய்த பாவங்களையும் அவரிடம் வெளிப்படையாக அறிக்கை செய்யுங்கள். பரிசுத்தருடைய கரங்களில் உங்கள் வாழ்வை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது மட்டுமே உங்கள் நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், திட்டங்களும் நிறைவடையும். உங்களுக்கான இறைவனுடைய சித்தத்தை நீங்கள் நிறைவேற்ற முடியும். உலக திட்டங்களிலிருந்தும் சுயநலத்திலிருந்தும் திரும்பி, இறைவனை நோக்கிச் செல்லும்படி ஒருவருடைய வாழ்வின் பாதையில் ஏற்படும் மாற்றமே உண்மையான மனமாற்றமாகும். அப்பொழுதுதான் அந்த நபர் இறைவனுடைய அன்பினால் நிறைந்திருக்க முடியும்.

நாம் இறைவனிடத்தில் வருவது நம்முடைய மீட்பையும், பரிசுத்தரிடத்திற்குத் திரும்புவது அழிவிலிருந்து விடுதலையடைவதையும் வெளிப்படையாகக் காண்பிக்கிறது. மனந்திரும்பிய மனிதனுடைய மனதில் இறைவன் இருந்து அவனுக்குப் பாதுகாப்பு அருள வேண்டியது அவசியமாயிருக்கிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் நாமத்தினால் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேதுரு குறிப்பிட்டார். பழைய மனிதன் பாவத்திற்கு இறந்துபோவதையும் மீட்பருடைய புதிய உலகத்திற்குள் விசுவாசி நுழைவதையுமே அந்தத் திருமுழுக்கு காண்பிக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் அழிந்துபோகும் நபருக்கு ஒப்பாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவர் இறைவனுடைய கிருபையினால் மீட்கப்படுகிறார். அவர் ஒரு புதிய படைப்பாக மாற்றப்பட்டு, உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறார். பிதாவினுடைய மகிமைக்காக கிறிஸ்துவினுடைய நீதி அவருக்கு அருளப்படுகிறது. நம்முடைய உள்ளான மனிதனில் உள்ள பாவங்களை நீக்கிச் சுத்திகரிக்கப்படுவது திருமுழுக்கின் முதல் பலனாயிருக்கிறது. கிறிஸ்துவோடு இணைக்கப்படும் ஒருவருடைய நெற்றியில் அவர் கர்த்தருக்குரியவர் என்பது யாருக்கும் தெரியாத எழுத்துக்களில் பொறிக்கப்படுகிறது. இறைவனுடைய மகனுடைய ஒப்புரவாகுதலினால் அவர் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டாவது, திருமுழுக்கின் பயனாக ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறார். யோவான் தான் கொடுத்த திருமுழுக்கு மனந்திரும்புதலுக்காகக் கொடுக்கப்பட்ட வெறும் அடையாளம் என்றும் அது கிறிஸ்துவினால் கொடுக்கப்படும் திருமுழுக்கிற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது என்றும் அறிந்திருந்தார். அவர் வெளிப்படையாகவே அதைச் சொல்லியிருந்தார்: “எனக்குப் பின் வருகிறவர் என்னிலும் வல்லமையுள்ளவர். அவர் உங்களுக்கு ஆவியினாலும் அக்கினியினாலும் திருமுழுக்குக் கொடுப்பார்”. பெந்தகொஸ்தே நாளின்போது முதன்முதலாக வரலாற்றில் இந்த இரட்சிப்பு நிறைவேறும் தருணம் நடைமுறைக்கு வந்தது. தன்னைக் கொலைசெய்த பாவத்திலிருந்து மனந்திரும்பிய பாவிகளுக்கு கிறிஸ்து பரிசுத்த ஆவியினாலே திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் அதற்காக தண்ணீர் திருமுழுக்கினால் ஆயத்தம்செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் நொருக்கப்பட்டவர்களாக விசுவாச உலகத்திற்குள் நுழைந்தார்கள். இறைவனுடைய அன்பு அவர்கள் அனைவருடைய அறிவுக்கும் அப்பாற்பட்டதாயிருந்தது.

அன்புள்ள சகோதர, சகோதரியே, நீங்கள் திருமுழுக்குப் பெற்று விட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டீர்களா? திருமுழுக்கு என்னும் வெளியான சடங்கு உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுத் தராது. அது நோயாளிக்கு போடப்படும் ஊசியைப் போன்றதல்ல. பரிசுத்த ஆவியானவர் காற்றைப் போல தமக்குச் சித்தமான இடத்தில் வீசுகிறார். எனவே விசுவாசமில்லாத திருமுழுக்குப் பயனற்றதாயிருக்கிறது. உங்களுடைய அன்பின் மூலமான கிறிஸ்து உயர்த்தப்பட்டு, மற்றவர்களுக்கு வெளிப்படும்படி உங்கள் சுயநலத்தை அழித்து உங்கள் திருமுழுக்கின் அனுபவத்தை உறுதிசெய்யுங்கள். ஒரு நாளில் அவரோடு நீங்கள் என்றும் வாழப்போகிறீர்கள். பரிசுத்த ஆவியானவரினால் திருமுழுக்குப் பெற்றவர்களுடைய சிறப்பான குணாதிசயங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அன்பு, சந்தோஷம், சமாதானம், சாந்தம், நீதி, விசுவாசம், இரக்கம், பொறுமை, இச்சையடக்கம் ஆகியவையே அவை. இந்த கொடைகளை நீங்கள் பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்றுவிட்டீர்களா?

விண்ணப்பம்: ஒ, பிதாவே, உம்முடைய குமாரன் மூலமாக நீர் உம்முடைய வாக்குறுதியை மனிதர்கள் மீது பொழிந்தரளியதால் உமக்கு நன்றி. நாங்கள் உம்மை ஆராதித்து, துதித்து, அனைத்து விசுவாசிகளையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படி உம்மிடம் வேண்டுகிறோம். உம்முடைய அன்பினாலும் சத்தியத்தினாலும் நீர் எங்களை நிரப்பும். அப்போது நாங்கள் உம்முடைய பரிசுத்த ஆவியானவரோடு எதிர்த்து வாதிடாமல், உம்முடைய இரக்கமுள்ள குமாரனுடைய நாமத்தில் உறுதியாக நிற்போம்.

கேள்வி:

  1. நாம் எவ்வாறு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம்? அவர் ஒரு விசுவாசியில் குடிகொள்வதற்கான நிபந்தனைகள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:01 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)