Previous Lesson -- Next Lesson
2. இயேசு மேலறையில் தமது சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:19-23)
யோவான் 20:19
19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
கதவுகள் பூட்டப்பட்ட அறையில் சீஷர்கள் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பயப்படத்தக்க நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பேதுரு மற்றும் யோவான் மூலமாக கல்லறை காலியாய் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர் உயிர்த்தெழுந்தார் என்று தேவதூதர்கள் சொன்ன செய்தியுடன் அந்தப் பெண்கள் இதை உறுதிப்படுத்தினார்கள். மகதலேனா மரியாள் தான் இயேசுவைக் கண்டதை அறிவித்தாள். இயேசுவைப் பின்பற்றியவர்களுக்கு இச் செய்தி அதிர்ச்சியைத் தந்தது. மரித்த ஒருவர் உயிருடன் எழுந்துள்ளார். ஆனால் உண்மையுள்ள குழுவாகிய சீஷர்களிடத்தில் இன்னும் அவர் வரவில்லை. கர்த்தர் இயேசு சிறைபிடிக்கப்பட்டப்போது, அவர்களெல்லாரும் தூக்கத்தில் இருந்தார்கள். அவர் சிறைபிடிக்கப்பட்டப்போது, பேதுரு மறுதலித்தார். அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது ஒருவரும் கர்த்தர் பக்கம் நிற்கவில்லை. சிலுவையின் அருகில் கூட வரவில்லை. யோவான் மற்றும் சில பெண்கள் மட்டும் இருந்தார்கள். இயேசுவின் சரீரத்தை சிலுவையில் இருந்து இறக்கும் சமயத்தில் உதவி செய்தார்கள். அவர்கள் யூதர்களைக் குறித்துப் பயந்திருந்தார்கள். பண்டிகை முடிந்தவுடன் உபத்திரவம் ஆரம்பிக்கும் என்று எண்ணினார்கள். இக் காரணங்களுக்காக அவர்கள் கதவுகளைப் பூட்டி உள்ளே கூடியிருந்தார்கள். உள்ளறையில் நம்பிக்கையற்றவர்களாய் இருந்தார்கள்.
பெண்களின் செய்தி வெறும் கனவு என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் இவ்விதம் பேசிக் கொண்டார்கள். “நாங்கள் இயேசுவைப் பின்பற்றினோம். அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தோம். அவருடைய பணிகளை நிறைவேற்றினோம். இங்கே நாங்கள் தோற்றுப்போனவர்களாக இருக்கிறோம். அவர்கள் எங்களை அழிக்க முற்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சோர்வுகளின் மத்தியில் அவிசுவாசம் மற்றும் கசப்புணர்வுகள் மத்தியில் இயேசு அவர்கள் நடுவே நின்றார். அவர்களது நம்பிக்கை மற்றும் அன்பின் நிமித்தமாக அவர் வரவில்லை. ஆனால் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, அவிசுவாசத்துடன் இருந்த அவர்களுக்கு கிருபை பாராட்டினார்.
அவர்கள் நடுவில் இயேசுவின் அமைதியான தரிசனம் ஒரு அற்புதம் ஆகும். மரித்த ஒருவர் உயிருடன் தோன்றியுள்ளார். புறக்கணிக்கப்பட்டவர் விடுதலையுடன் இருக்கிறார். கல்லறையின் கல்லோ அல்லது இரும்புக் கதவோ அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட மக்கள் மத்தியில் அவருடைய பிரசன்னத்தை தடுக்க முடியவில்லை. இங்கே மற்ற மனிதர்களைப் போல சரீரத்துடன் அவர் அறையில் அவர்கள் மத்தியில் தோன்றினார். அவரைப் பார்த்தார்கள், கேட்டார்கள், தொட்டார்கள். அதே நேரத்தில் அவர் ஆவியாய் இருக்கிறார். சுவர்கள் மற்றும் கதவுகளின் ஊடாக கடந்து சென்றார். அவருடைய புதிய தோற்றம் நாம் எவ்விதம் இருப்போம் என்பதை காண்பிக்கிறது. நாம் அவரில் நிலைத்திருக்கும் போது இவ்விதம் இருப்போம் அவருடைய உயிர்த்தெழுதலின் சரீரம் நம்முடைய நம்பிக்கையாய் இருக்கிறது.
என்ன ஓர் ஆறுதல்! சீஷர்களுடைய குறைவுகளுக்காக அவர் மரித்தோரில் இருந்து எழுந்த போது, அவர்களை கண்டிக்கவில்லை. அவர்களை உயிர்த்தெழுதலின் வாழ்த்துதலினால் வாழ்த்தினார். உயிர்த்தெழுந்த பிறகு அந்த சீஷர்களுக்கு அவர் சொன்ன முதல் வார்த்தைகள், “சமாதானம் உண்டாவதாக” அவருடைய சிலுவையின் மூலமாக அவர் உலகத்தாரை இறைவனுடன் ஒப்புரவாக்கி உள்ளார் என்பதை இந்த வாழ்த்துதல் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. பரலோகில் இருந்து பூலோகிற்கு சமாதானம் பரவத் தொடங்கியது. புதிய யுகம் ஆரம்பித்தது. கிறிஸ்துவினால் வரும் வாழ்வை ஒருவர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவரை நிராகரிக்கலாம். மனிதன் அவனுடைய இரட்சிப்பிற்கு பொறுப்பு உள்ளவன். மனந்திரும்பி இயேசுவில் விசுவாசம் வைக்கும் எவரும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். சமாதானத்தின் அதிபதியுடன் இணைந்து கொள்பவன் அவருடைய ஒப்பற்ற பலியின் மூலம் நீதிமானாக்கப்படுவான். பவுல் இவ்விதம் கூறுகிறார், “நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இறைவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, மரித்தோரிலிருந்து எழுந்தவரே, சமாதானப் பிரபுவே, நாங்கள் மகிழ்ச்சியுடன், நன்றியுடன் உம்மைப் பணிகிறோம். எங்களை நியாயந்தீர்க்கவோ, அல்லது தண்டிக்கவோ நீர் வரவில்லை. உமது கிருபையை எங்கள் மீது பொழிந்தருள வந்தீர். எங்களை மனச்சோர்வு, அவிசுவாசத்தில் இருந்து காப்பாற்ற வந்தீர். உமது சமாதானத்தைத் தாரும். இறைவனுடன் ஒப்புரவாக்கி எங்களை நிலைநிறுத்தும், உங்கள் முயற்சிகளின் பலனால் உண்டானதல்ல உங்கள் இரட்சிப்பு; அது கிருபையினால் உண்டான ஈவு. எங்கள் நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் உமது கிருபையின் நோக்கத்தை புரிந்து கொள்ள ஞானம் தாரும்; அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ளட்டும். பரிசுத்த இறைவனுடன் தொடர்ந்து பகை இல்லாதபடி காத்துக்கொள்ளும்.
கேள்வி:
- இயேசு உயிர்த்தெழுந்தபின்பு இயேசு சீடர்களுக்கு கூறி முதல் வார்த்தையின் பொருள் என்ன?