Previous Lesson -- Next Lesson
2. பரிசுத்த திரித்துவம் தேற்றரவாளன் மூலமாக விசுவாசிகளில் இறங்குகிறார்கள் (யோவான் 14:12–25)
யோவான் 14:21
21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
அனைத்துக் காலத்திலும் ஆசீர்வாதம் மற்றும் கிருபையின் நீரூற்று திருச்சபையில் பிரவாகித்து ஓடிக்கொண்டே இருக்கிறது. அனைத்து விசுவாசிகளும் ஆசீர்வாதத்தினால் நிறைந்தாலும், இன்னும் சமுத்திர நிறைவான கிருபை மீந்திருக்கும். இயேசு தாம் மேசியா என்பதற்கும் இறைமகன் என்பதற்கு ஏற்ற நிலையில் அவருடைய எதிரிகளுக்கு முன்பாக நின்றாக வேண்டும். இந்தக் கடைசி மணித்துளிகளில் தமக்கும் பிதாவுக்கும் இருக்கும் ஐக்கியத்தை அவர் தம்முடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் தெய்வீகத்துவத்தின் முழுமை நம்முடைய இருதயங்களை நிரப்பும்படி அவை திறக்கப்படுவதாக.
சீடர்கள் அவரை நேசிப்பது வெறும் உணர்ச்சிபூர்வமானதாக இராமல் அவருடைய கட்டளைகளுக்கு நடைமுறையில் கீழ்ப்படிவதாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். இயேசுவின் அன்பில் மறைந்துள்ள ஆலோசனையை சாதாரண மனிதனால் புரிந்துகொள்ள முடியாது. அவர் பரலோகத்தின் பொக்கிஷங்களை நமக்குத் திறந்துகொடுத்து, நாம் இழந்துபோனவர்களுக்குச் சேவை செய்யவும், சகோதரர்களைக் கட்டியெழுப்பவும் நம்மை அனுப்புகிறார். அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களை அறிந்துகொள்ளும் பெலத்தை நமக்குக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சி நம்மை உந்தித் தள்ளுவதால் அவருடைய கட்டளைகள் பாரமானவைகளோ சாத்தியமற்றவைகளோ அல்ல. நாம் செய்த ஒவ்வொரு தீமையையும் அறிக்கைசெய்யும்படி சத்திய ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார். அவர் நம்மை நேசித்து முழுவதுமாக நம்மை இரட்சித்தபடியால், ஆவியானவர் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி நம்மை பெலப்படுத்துகிறார். ஆகவே நாம் அவரை நேசித்து அவருடைய ஆவியில் நடக்கிறோம்.
நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? உடனடியாக “ஆம்” என்று பதிலளிக்காதீர்கள். “இல்லை” என்று சோகத்துடனும் கூறவேண்டாம். நீங்கள் மறுபடியும் பிறந்தவராக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருந்தால், நீங்கள், “கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய மேன்மை, தாழ்மை, தியாகம் மற்றும் பொறுமை ஆகியவற்றுக்காக நான் உங்களை நேசிக்கிறேன். உங்களை நேசிக்கும் பெலத்தை நீர் எனக்குக் கொடுத்திருக்கிறீர்” என்று சொல்வீர்கள். நம்முள் இருக்கிற பரிசுத்த ஆவியுடனான இந்த உரையாடல், வெற்று நம்பிக்கையோ கற்பனையோ அல்ல. அது அன்பின் செயல்களைச் செய்யும்படியான தீர்மானத்தின் மீது கட்டப்பட்டது. கர்த்தர் தமக்குப் பிரியமானவர்களில் அன்பை உண்டுபண்ணி, தம்முடைய கிருபையினால் அவர்களை அதில் உறுதிப்படுத்துகிறார்.
இயேசுவை நேசிக்கிறவர்களை இறைவன் நேசிக்கிறார். குமாரன் மனுக்குலத்தை இரட்சிக்கும்படியாக அவருக்கு அனைத்து வல்லமையையும் இரக்கத்தையும் பிதா கொடுத்திருக்கிறார். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் இறைவனை ஏற்றுக்கொள்கிறான். இயேசுவை நிராகரிப்பவன் இறைவனை நிராகரிக்கிறான். கிறிஸ்துவின் ஆவியானவர் உங்களை மாற்றி, உங்களை அன்புள்ள நபராக்கியிருப்பதால், இறைவன் உங்களை “பிரியமானவன்” என்று அழைப்பதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களில் நீங்கள் நல்லவர் அல்ல, இறைவனுடைய அன்பு உங்களைப் புதிய படைப்பாக்குகிறது. கிறிஸ்து உங்களில் செயல்பட்டு, பிதாவிடம் உங்களுக்காகப் பரிந்துபேசுகிறார். அவர் உங்களை நித்தியத்திற்கும் காத்துக்கொள்வார். அவர் உங்களுக்கு ஆவிக்குரிய நிச்சயத்தை வெளிப்படுத்துவார். உங்கள் இரட்சகரைப் பற்றிய அறிவில் நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், கீழ்ப்படிதல், அன்பு, தியாகம், சுய-வெறுப்பு போன்றவற்றில் நீங்கள் வளராவிட்டால் அந்த அறிவு வளர்ச்சி பெலவீனமானதாகவே இருக்கும்.
யோவான் 14:22-25
22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். 23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. 25 நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
ஸ்காரியோத் அல்லாத யூதா என்ற ஒரு சீடனும் இயேசுவுக்கு இருந்தார். காட்டிக்கொடுப்பவன் சென்றதிலிருந்து இயேசு வேறுகாரியங்களைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பயங்கரமான சம்பவம் ஏதோ நடைபெறப்போகிறது என்று அவர் சந்தேகித்தார்.
ஸ்காரியோத் அல்லாத யூதா என்ற ஒரு சீடனும் இயேசுவுக்கு இருந்தார். காட்டிக்கொடுப்பவன் சென்றதிலிருந்து இயேசு வேறுகாரியங்களைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பயங்கரமான சம்பவம் ஏதோ நடைபெறப்போகிறது என்று அவர் சந்தேகித்தார். இயேசு அவருக்கு நேரடியாக பதிலுரைக்கவில்லை. திருச்சபையின் முக்கிய நோக்கமும் தேவையும் இவ்வுலகத்திற்கு மரிப்பதே என்று அவர் அறிவித்தார். இறைவனை அறியும் உண்மையான அறிவிற்கு வழிநடத்திச் செல்லும் படிநிலைகளை இயேசு காண்பித்தார். இயேசுவை அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளும்போது நமக்குப் புதுவாழ்வு கிடைக்கிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவருடைய அன்பை அனுபவிப்பவர்களாகவும் மாறுகிறோம். அதன் பிறகு இயேசு ஒரு முக்கிய வாக்கியத்தைக் கூறினார்: “நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனோடே வாசம்பண்ணுவோம்” இங்கே அவர் திருச்சபையைப் பற்றி மட்டும் பேசாமல் ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியையும் பற்றிப் பேசுகிறார். பரிசுத்த திரித்துவ இறைவன் விசுவாசிக்குள் வந்து அவனில் வாசம்பண்ணுகிறார். இந்த வார்த்தை ஒரு விசுவாசி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் அரவணைப்பில் இருப்பதைப்போல அவனுடைய உள்ளத்தில் தொனிக்கிறது. இரட்சிப்பின் செயல்பாட்டில் இறைவன் ஒரு மனிதனுக்குள் வந்து வாசம்செய்து அவனை முழுவதும் பாதுகாக்கிறார். இயேசுவை நம்பும் எந்த மனிதனும் இந்த உண்மையான இரகசியத்தை அனுபவிக்கிறான்.
விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரித்துவ இறைவனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், மகிமைப்படுத்துகிறோம். நீர் எங்களைச் சந்தித்து பாவிகளாகிய எங்களில் வாசம்பண்ணுகிறீர். என்னுடைய பாவங்களை மன்னியும். நீர் என் உள்ளத்தில் கொடுத்துள்ள அன்பின் வல்லமைக்காவும் அன்பின் ஆவிக்காகவும் உமக்கு நன்றி. என்னை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
கேள்வி:
- கிறிஸ்துவின் மீதான அன்பு நம்மில் எவ்வாறு வளருகிறது? பரிசுத்த திரித்துவ இறைவன் நம்மீது எவ்வாறு இறங்குகிறார்?