Previous Lesson -- Next Lesson
1. இறைவனுடைய வார்த்தை இயேசுவில் மனுவுருவாதல் (யோவான் 1:1-5)
யோவான் 1:2-4
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
கிறிஸ்து தனக்காக வாழாமல் எப்போதும் இறைவனுக்காகவே வாழ்ந்தார். அவர் பிதாவிலிருந்து பிரிந்து வராமல், அவரை நோக்கி இயங்கிக் கொண்டிருந்தார், அவரில் வாழ்ந்தார், அவரில் நிலைத்திருந்தார். தன்னுடைய பிதாவை நோக்கிய கிறிஸ்துவின் இந்த இயக்கம் நற்செய்தியாளனாகிய யோவானுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததால், தன்னுடைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இந்தப் பொருள் வரும்படியான காரியங்களைத் திரும்பத்திரும்பக் கூறுகிறார். கிறிஸ்துவுக்கும் அவருடைய பிதாவுக்குமிடையிலிருந்த இந்த நிரந்தர ஐக்கியமே பரிசுத்த திரித்துவத்தின் இரகசியமாகும். ஒருவரிலிருந்து ஒருவர் பிரிந்திருக்கும் மூன்று தனித்தனி கடவுள்களை நாம் விசுவாசிப்பதில்லை. ஆனால் அன்பினால் நிறைந்த ஒரே இறைவனை நாம் விசுவாசிக்கிறோம். நித்திய இறைவன் ஒதுங்கி தனிமையில் வாழ்வதில்லை. அவருடைய குமாரன் எப்போதும் அவருடன் இருக்கிறார். அவருடன் பூரணமாக ஒத்திசைந்து வாழ்கிறார். ஒருவர் தன்னுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட அனுபவத்தைப் பெறாவிட்டால், இறைவனுடைய அடிப்படைத் தன்மையைக் குறித்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஒரே கடவுளாக ஐக்கியப்படுத்துவது தெய்வீக அன்புதான்.
ஆதியில் இறைவன் உலகத்தைப் படைத்தபோது, அதை அவர் தனிமையில் அமைதியாக செய்யவில்லை. மாறாக அவர் தன்னுடைய வார்த்தையின் மூலமாகவே உருவாக்கினார். கிறிஸ்துவே இறைவனுடைய வார்த்தையாக இருப்பதால், உலகம் அவர் மூலமாகத்தான் அதை உருவானது. இதற்கு கிறிஸ்து இரட்சகரும், பரிந்துபேசுபவரும், மீட்பரும் மட்டுமல்ல சிருஷ்டிகரும் அவரே என்று பொருள். அவர் படைக்காத எதுவும் இருக்க முடியாது என்பதால் அவர் சர்வ வல்லவர். அவர் செய்யாத எதுவும் நடைபெறாது என்பதால் அவரே அனைத்தையும் கட்டுப்படுத்துபவர். கிறிஸ்து யார் என்பதை உணர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் போதிய அளவு பெரிய இருதயத்தை கடவுள் நமக்குக் கொடுக்க வேண்டும். அனைத்து நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும், அனைத்து ஆதார சக்திகளும், விண்மீன் கூட்டங்களும் கிறிஸ்துவின் வல்லமையையும் மகிமையையும் தாழ்மையுடன் வெளிப்படுத்துபவைகளேயன்றி வேறல்ல. உங்களுடைய குரல், உங்களுடைய கட்டுடல், உங்களுடைய உடலமைப்பு, இதயத் துடிப்பு ஆகிய அனைத்தும் அவர் உங்களுக்கருளிய கொடைகளே. அப்படியானால் நீங்கள் எப்போது அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்?
இறைவனையும் அவருடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் தவிர அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டவை. அவர் தன்னில் உயிருள்ளவராகவும், நித்தியராகவும், பரிசுத்தராகவும் காணப்படுகிறார். இறைவன் தன்னில் ஜீவனுள்ளவராயிருப்பது போலவே, கிறிஸ்துவும் உண்மையான வாழ்வின் ஆதாரமாகவும், உயிர்ப்பிக்கும் உண்மையுள்ளவராகவும், நம்முடைய பாவம், குற்றம் ஆகிய மரணத்திலிருந்து நம்மை உயிர்ப்பித்து, நம்மில் நித்திய வாழ்வை நிலைநிறுத்துகிறவராகவும் காணப்படுகிறார். கிறிஸ்துவில் உள்ள இந்த தெய்வீக ஜீவன் மரணத்தை மேற்கொண்டது; அவர் தன்னுடைய தெய்வீக உயிரின் வல்லமையினாலே கல்லறையை விட்டு வெளியேறினார். கிறிஸ்து சிருஷ்டிகர் மட்டுமல்ல, தன்னில்தான் ஜீவனின் ஆதாரமாகவும் காணப்படுகிறார். பரிசுத்தராயிருக்கிறார் என்ற நிலையில் அவர் ஒருபோதும் மரிப்பதில்லை. இறைவனிலோ அல்லது அவருடைய குமாரனிலோ எந்தப் பாவமும் காணப்படாது, அதனால் அவர் எப்போதும் உயிரோடிருக்கிறார். கிறிஸ்துவின் ஜீவனைக் குறித்த சிந்தனைகளை யோவானுடைய நற்செய்தியின் அதிகாரங்களில் நாம் திரும்பத்திரும்பக் காண்கிறோம். அவருடைய அடிப்படையான கொள்கைகளில் இந்த ஜீவனும் ஒன்று.
சூரியனுடைய ஒளி பூமிக்கு உயிரைக் கொடுக்கிறது. கிறிஸ்துவைப் பொறுத்தவரை இதற்கு எதிரிடையாக காணப்படுகிறது: வெளிச்சத்திற்குக் காரணமே கிறிஸ்துவின் ஜீவன்தான். அவர் மூலமாக நாம் அனுபவிக்கும் உயிர்மீட்சி நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. நம்முடைய சமயம் மரணத்தையும் நியாயத்தீர்ப்பையும் உண்டுபண்ணும் நியாயப்பிரமாணத்திற்குரியதல்ல, அது ஜீவன், ஒளி, நம்பிக்கை ஆகியவற்றின் செய்தி. மரணத்திலிருந்து கிறிஸ்து உயிர்தெழுந்ததன் மூலம் அனைத்து அவநம்பிக்கையும் நீங்கிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்செய்வதனால் நாம் இறைவனுடைய ஜீவனில் பங்குடையவர்களாக மாற்றப்பட்டுள்ளோம்.
பாவத்தினால் உலகம் இருளடைந்திருக்கிறது, ஆனால் கிறிஸ்து ஒளியில் அன்பாயிருக்கிறார். எந்தவித இருளோ, தவறோ, தீமையோ அவரிலில்லை. இதனால் கிறிஸ்து முழு மகிமையுடன் காணப்படுகிறார். அவர் ஒளியைக் காட்டிலும் அதிகமாகப் பிரகாசிக்கிறார். இருப்பினும் நற்செய்தியாளனாகிய யோவான் அவருடைய மகிமையின் பிரகாசத்தைக் கூறி ஆரம்பிக்காமல், அவருடைய பலத்தையும் ஜீவனையும் குறிப்பிடுகிறார். ஏனெனில் கிறிஸ்துவின் பரிசுத்தத்தைக் குறித்த அறிவு, நம்முடைய பாவங்களை நமக்கு வெளிப்படுத்தி, நம்மை நியாயந்தீர்த்து, நம்மை அழித்துவிடும். ஆனால் அவருடைய ஜீவனை நாம் உணர்ந்துகொள்வது நமக்கு வாழ்வைக் கொடுக்கும். கிறிஸ்துவைத் தியானித்தல் உண்மையில் நம்மை ஆறுதல்படுத்தி நமக்குப் புத்துணர்வூட்டும்.
இயேசுவே மனிதர்களுக்கு ஒளியானவர். அவர் தனக்காக ஒளிவீசி, தன்னுடைய சொந்தப் பெயரை கனப்படுத்துவதில்லை. மாறாக அவர் நமக்காக ஒளிவீசுகிறார். நம்மிலிருந்து ஒளிவீசுவதில்லை, இருள்தாள் புறப்பட்டுவரும். மனுக்குலமனைத்தும் தீமையுள்ளதாயிருக்கிறது. ஆனால் நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டு நம்முடைய இருளை உணரும்படி கிறிஸ்து நமக்கு ஒளியூட்டுகிறார். அவருடைய நற்செய்தியின் மூலம் நாம் மரணத்திலிருந்து எழுந்து நித்திய வாழ்வுக்குள் நுழைகிறோம். நம்முடைய நம்பிக்கையற்ற நிலையை விட்டுவிட்டு அவரிடம் வரும்படி அவருடைய வாழ்வின் ஒளியின் மூலமாக நம்மைக் கவர்ந்து அழைக்கிறார். நாம் தீர்மானத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடத்தில் சேர்கிறோம்.
விண்ணப்பம்: ஓ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீரும் பிதாவும் பரிசுத்த ஆவியும் ஒன்றாயிருக்கிறதற்காக உமக்கு முன்பாக நாங்கள் பணிகிறோம். நீர் உம்முடைய பிதாவோடு இசைந்து இந்த உலகத்தைப் படைத்தீர். நீர் எனக்கு வாழ்வளித்தீர். என் வாழ்விலுள்ள இருளை எல்லாம் மன்னித்து, நான் பாவத்தின் இருளைவிட்டு நித்திய வாழ்வின் வெளிச்சத்துக்குள் போகும்படியாக, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக நீர் எனக்கு ஒளியூட்டும்.
கேள்வி:
- யோவான் தன்னுடைய நற்செய்தியின் ஆரம்பத்தில் முன்வைக்கும் கிறிஸ்துவின் ஆறு குணாதிசயங்கள் யாவை?